Bamako பேராயர் : மாலி நாட்டுக்கு மனிதாபிமானக் கதவுகள் திறக்கப்பட வேண்டும்
சன.18,2013. மாலி நாட்டில் உணவும் மருந்துகளும் இன்றி துன்புறும் அப்பாவி மக்களுக்கு
மனிதாபிமான உதவிகள் தடையின்றி அனுப்பப்படுவதற்கு அனுமதிகள் வழங்கப்படுமாறு மாலி நாட்டின்
காரித்தாஸ் நிறுவனத் தலைவரான Bamako பேராயர் Jean Zerbo கேட்டுள்ளார். மாலி மக்களுக்குத்
துன்பத்தின் புதிய காலம் தொடங்கியிருக்கிறது என்றுரைத்த பேராயர் Zerbo, அந்நாட்டில் சண்டை
இடம்பெறும் வடக்கிலிருந்தும், பிற இடங்களிலிருந்தும் ஏறக்குறைய நான்கு இலட்சம் மக்கள்
தென்பகுதிக்கும் அண்டை நாடுகளுக்கும் சென்றுள்ளனர் என்றும் கூறினார். மாலி நாட்டில்
இசுலாமியத் தீவிரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே இடம்பெற்றுவரும் தாக்குதல்களில்
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர், நலவாழ்வு வசதிகள், மலேரியாவைத் தடுக்க
உதவும் பொருள்கள் உட்பட மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்றும் பேராயர் தெரிவித்தார்.