சன.15,2013. மாலி நாட்டில் இசுலாமியத் தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக, பிரான்ஸ் நாட்டுப்
படைகள் போரிட்டு வருவது, மாலி நாட்டு மக்களுக்கு ஆறுதலாக இருக்கின்றது என்று, அந்நாட்டு
ஆயர் பேரவைச் செயலர் அருள்பணி Edmond Dembele, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார். ஜிகாத்
எனப்படும் இசுலாமியப் தீவிரவாதக் குழுக்கள், இம்மாதம் 10ம் தேதி Konna நகரைக் கைப்பற்றிய
பின்னர், அக்குழுக்கள் தென்பகுதிக்கும் வரக்கூடும் என்ற அச்சத்தில் தாங்கள் மூச்சைக்
கையில் பிடித்துக் கொண்டிருந்ததாகவும், ப்ரெஞ்ச் இராணுவத்தின் தலையீடு அப்புரட்சிக்குழுக்கள்
மேலும் முன்னேறவிடாமல் தடுத்திருப்பதாகவும் அருள்பணி Dembele தெரிவித்தார். மாலியின்
தீவிரவாதக் குழுக்களால் ஆக்ரமிக்கப்பட்டுள்ள வடபகுதி மக்களும்கூட, ப்ரெஞ்ச் இராணுவத்தின்
தலையீட்டை நம்பிக்கையுடன் எதிர்நோக்கியிருப்பதாகவும் அருள்பணி Dembele கூறினார். இதற்கிடையே,
மாலியின் மைய நகரான டியாப்லியை இந்த இசுலாமிய தீவிரவாதக் குழுக்கள் கைப்பற்றிவிட்டதாக
ப்ரெஞ்சு வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.