திருப்பீடச் செயலர் : திருமுழுக்கு யோவானைப் பின்பற்றிச் செயல்பட வத்திக்கான் நீதிமன்ற
நிர்வாகத்தினருக்கு அழைப்பு
சன.12,2013. வத்திக்கானுக்கு உள்ளே இடம்பெறும் நீதிமன்ற நிர்வாகத்தை தாழ்ச்சியோடும்,
உண்மையிலும் ஒவ்வொருவரும் செய்வதற்கு இறைவனிடம் செபிப்போம் என்று வத்திக்கான் நாட்டின்
நீதிமன்ற உறுப்பினர்களிடம் கூறினார் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே.
வத்திக்கான் நாட்டில் நீதிமன்ற ஆண்டைத் தொடங்கி வைக்கும் திருப்பலியை இச்சனிக்கிழமை
காலை நிகழ்த்தி மறையுரையாற்றிய கர்தினால் பெர்த்தோனே, கடவுளோடு நெருங்கிய உறவு கொண்டு
அவரது அருளை ஏற்று வாழாமல் இருந்தால், நல்லிணக்கம், நீதி, அமைதி ஆகிய பண்புகளை முழுமையாய்
அடைய முடியாது என்றும் கூறினார். கடும் தப வாழ்க்கை வாழ்ந்து ஓய்வின்றி கடவுளைத் தேடுவதில்
தம் வாழ்வைச் செலவழித்த திருமுழுக்கு யோவான் பற்றி மறையுரையில் விளக்கிய கர்தினால் பெர்த்தோனே,
விசுவாசிகள் ஒவ்வொருவரும் திருமுழுக்கு யோவானின் எடுத்துக்காட்டான மற்றும் சான்று பகரும்
வாழ்வைப் பின்பற்றி இயேசுவின் அன்பிலும் பிறரன்பிலும் வளருமாறு கேட்டுக் கொண்டார்.