பிலிப்பின்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட 'கருப்பு நாசரேத்தூர் மனிதன்'
திருவிழாவில் 80 இலட்சம் மக்கள்
சன.10,2013. சனவரி 9ம் தேதி, இப்புதனன்று பிலிப்பின்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட 'கருப்பு
நாசரேத்தூர் மனிதன்' (Black Nazarene) திருவிழாவில் ஏறத்தாழ 80 இலட்சம் மக்கள் கலந்து
கொண்டனர். ஒவ்வோர் ஆண்டும் சனவரி 9ம் நாள் பிலிப்பின்ஸ் நாட்டின் மணிலா பெருநகரில்
நடைபெறும் இந்த ஊர்வலத்தில் இலட்சக்கணக்கானோர் கலந்து கொள்வர். இப்புதன் காலை, மணிலா
பேராயர் கர்தினால் Luis Antonio Tagleஅவர்களால் நிறைவேற்றப்பட்டத் திருப்பலியுடன்
ஆரம்பமான ஊர்வலம், நாள் முழுவதும் மணிலா நகரின் பல சாலைகளிலும் தொடர்ந்து, இவ்வியாழன்
அதிகாலையில் Quiapo கோவிலை அடைந்தது. 1606ம் ஆண்டு புனித அகுஸ்தீன் துறவுச் சபையைச்
சேர்ந்த துறவிகளால் சிலுவை சுமந்து செல்லும் இயேசுவின் திருஉருவம் மெக்சிகோ நாட்டில்
இருந்து கொண்டுவரப்பட்டது. வரும் வழியில் கப்பலில் நிகழ்ந்த தீவிபத்தில் இந்த உருவம்
கருகிவிட்டது. எனவே, இவ்வுருவம் கருப்பு நாசரேத்தூர் மனிதன் என்ற பெயர் பெற்றது. இத்திரு
உருவம் புதுமைகள் ஆற்றும் வல்லமை பெற்றது என்று சொல்லப்படுவதால், ஊர்வலாமாய் இவ்வுருவம்
கொண்டு செல்லப்படும்போது, இதனைத் தொடுவதற்குக் கூட்டம் அலைமோதும். கடந்த ஆண்டு நடைபெற்றத்
திருவிழாவின்போது 700க்கும் அதிகமானோர் நெரிசலில் காயமுற்றனர். இவ்வாண்டு நடைபெற்ற ஊர்வலம்
கட்டுப்பாட்டுடன் நடத்தப்பட்டதென்றும், காயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமில்லை என்றும்
கூறப்படுகிறது.