2013-01-09 15:56:28

TED.comன் கருத்தரங்கு ஏப்ரல் மாதம் 19ம் தேதி வத்திக்கானில் நடைபெறும்


சன.09,2013. இணையதளத்தில் மிக அதிக அளவில் காணப்படும் ஒரு வலைத்தளமாக விளங்கும் TED.com என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு கருத்தரங்கு வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி வத்திக்கானில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிநுட்பம், கேளிக்கை, சமுதாயப் பிரச்சனைகள் என்ற பல்வேறு அம்சங்களைப் பற்றிய தலைப்புக்களில் வழங்கப்படும் சிறப்பான சொற்பொழிவுகளைக் கொண்ட TED.com என்ற இணையதள அமைப்பாளர்கள் 'இன்றைய காலத்தில் மதச் சுதந்திரம்' என்ற தலைப்பில் இக்கருத்தரங்கை நடத்த உள்ளனர்.
கலாச்சாரத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi, மற்றும் பல்வேறு மதங்களின் சிந்தனையாளர்கள் கலந்துகொள்ளும் இக்கருத்தரங்கு இணையதளம் வழியாக பல கோடி மக்களை சென்றடையும் என்று, இக்கருத்தரங்கின் அமைப்பாளர் Giovanna Abbiati கூறினார்.
இன்றைய உலகில் மதசார்பற்ற நிலையும், மத அடிப்படைவாதமும் அமைதியை வெகுவாக குலைத்துவருவதால், மதச்சுதந்திரம் பற்றிய இக்கருத்தரங்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என்று கருத்தரங்கின் அமைப்பாளர் Abbiati மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.