2013-01-08 15:58:10

Amman ஆயர் : அமைதி என்பது கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பொதுவானது


சன.08,2013. பகிர்ந்து கொள்வதும், தாராளமாக இருப்பதும், பிறருக்குத் தங்களது இதயக் கதவுகளைத் திறந்து விடுவதும் அராபிய மதிப்பீடுகள், இவற்றை நினைத்துத் தாங்கள் பெருமிதம் அடைகின்றோம் என ஜோர்டன் நாட்டுத் தலைநகர் Amman ஆயர் Maroun Elias Lahham கூறினார்.
புனித பூமிக் கிறிஸ்தவர்களுடன் தலத்திருஅவையின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் விதமாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆயர்கள் புனித பூமிக் கத்தோலிக்கத் தலைவர்களுடன் நடத்திவரும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஆயர் Elias Lahham, வத்திக்கான் வானொலியின் நிருபருக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
நீ அன்பு செய்யும்போது அதனைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், இது கிறிஸ்தவ மதிப்பீடு மட்டுமல்ல, அராபிய மதிப்பீடும் ஆகும் என்றும் உரைத்த ஆயர், ஜோர்டனில் கத்தோலிக்கத் திருஅவையின் கல்வி, சமூக மற்றும் மனிதாபிமானப் பணிகள் மிகவும் வரவேற்கப்படுகின்றன என்று கூறினார்.
எருசலேம் இலத்தீன் திருஅவையைச் சேர்ந்த ஜோர்டனில் பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த ஏறக்குறைய 2 இலட்சம் கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். இவர்களில் கத்தோலிக்கர் பாதிப்பேரே என்றும் Amman ஆயர் கூறினார்.
ஜோர்டனில் பெரும்பாலானவர்கள் சுன்னி இசுலாம் பிரிவைச் சேர்ந்தவர்கள்.







All the contents on this site are copyrighted ©.