கம்போடிய திருஅவைக்கு திருத்தந்தையின் சிறப்புச் செய்தி
சன.07,2013. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் துவக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவையும்,
கத்தோலிக்கத் திருஅவையின் புதிய மறைக்கல்வி ஏடு வெளியிடப்பட்டதன் 20ம் ஆண்டு நிறைவையும்
சிறப்பிக்கும் விதமாக கருத்தரங்கு ஒன்றை நடத்திவரும் கம்போடிய தலத்திருஅவைக்கு ஒலி-ஒளி
வாழ்த்துச்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். கம்போடியா நாட்டை
இருண்ட காலத்திற்குள் தள்ளிய பிரச்சனைகளின் காலத்தை தற்போது தான் நினைவுகூர்வதாக தன்
செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, நற்செய்திக்குச் சான்று பகரும் விதமாக இக்காலக்கட்டத்தில்
உயிரிழந்த கிறிஸ்தவத் திருப்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினரின் மன உறுதியைப் பாராட்டுவதாகத்
தெரிவித்துள்ளார். அந்த சாட்சிய வாழ்வே கம்போடியாவில் திருஅவை சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான
ஆன்மீகப் பலத்தை வழங்கி, இன்று திருமுழுக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் காரணமாகியுள்ளது
எனவும் தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை. கம்போடியாவின் இளைஞர்கள், குருமாணவர்கள்,
குருக்கள், துறவறத்தார், மறைபோதகர்கள் என அனைவருக்கும் தன் சிறப்பு வாழ்த்துக்களையும்
இதில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.