கர்தினால் ஃபிலோனி : மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் நிலையான அமைதியை ஏற்படுத்த உரையாடலே
சிறந்த வழி
சன.05,2013. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் அண்மை நாள்களில் இடம்பெற்றுவரும் வன்முறை குறித்த
செய்திகள் கவலைதரும் அதேவேளை, உரையாடல் வழியாக மட்டுமே நாட்டில் நிலையான அமைதியை ஏற்படுத்த
முடியும் என்பதை பொறுப்பில் இருப்பவர்கள் உணர வேண்டுமெனக் கேட்டுள்ளார் விசுவாசப்பரப்புப்
பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni. மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் ஆயர்களுக்கும்
இறைமக்களுக்குமென செய்தி அனுப்பியுள்ள கர்தினால் Filoni, அந்நாட்டில் இடம்பெற்றுவரும்
தொடர் வன்முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டால் மட்டுமே குடிமக்களின் துன்பங்கள் குறையும்
என்று குறிப்பிட்டுள்ளார். அமைதி என்பது கனவு அல்ல, அதனை அடைய முடியும் என்று திருத்தந்தை
16ம் பெனடிக்ட் இவ்வாண்டு உலக அமைதி தினச் செய்தியில் சொல்லியிருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ள
கர்தினால் Filoni, அமைதியின் இளவரசர் இயேசு இந்த நாட்டு மக்களின் இதயங்களைத் திறந்து
அமைதி எனும் கொடையைக் கொடுப்பாராக என்று கூறியுள்ளார்.