அமெரிக்காவில் வாழ்வுக் கலாச்சார மாற்றத்திற்கு ஆயர்கள் அழைப்பு
சன.04,2013. அமெரிக்கச் சமுதாயத்தில் கொள்கைகளை மறுஆய்வு செய்தல் மற்றும் வாழ்வுக் கலாச்சார
மாற்றங்கள் மூலம் அந்நாட்டில் இடம்பெறும் வன்முறைகளை ஒழிக்க முடியுமென அமெரிக்க ஐக்கிய
நாட்டு ஆயர்கள் பேரவையின் பணிக்குழுக்களின் தலைவர்கள் கூறினர். அமெரிக்க ஐக்கிய நாட்டின்
Newtown பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு நிகழ்வை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட
குடும்பம், திருமணம், இளையோர், குடும்பநீதி எனப் பல பணிக்குழுக்களின் தலைவர்கள், அமெரிக்காவில்
வாழ்வுக் கலாச்சாரம் புதுப்பிக்கப்பட வேண்டுமெனக் கேட்டுள்ளனர். துப்பாக்கிகளைக் கொண்டிருப்பது
குறித்த தேசியக் கொள்கைகள், மனநல வாழ்வுக்குச் சிகிச்சை பெறுவதற்கான வசதிகள், கேளிக்கை
அரங்குகளில் வன்முறை உட்பட அமெரிக்கச் சமுதாயத்தின் மனித வாழ்வு குறித்த மதிப்பீடுகள்
மறுஆய்வு செய்யப்படுமாறும் அத்தலைவர்கள் கேட்டுள்ளனர்.