2013-01-03 15:06:17

இஸ்தான்புல் நகரில் Taize குழுமத்தின் நம்பிக்கை பயணம்


சன.03,2013. Taize குழுமத்தின் நம்பிக்கை பயணம் சனவரி 3ம் தேதி இவ்வியாழன் முதல், 6ம் தேதி ஞாயிறன்று கொண்டாடப்படும் திருக்காட்சித் திருவிழா முடிய இஸ்தான்புல் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 28ம் தேதி கடந்த வெள்ளிக் கிழமை முதல் சனவரி 2ம் தேதி இப்புதன் முடிய உரோம் நகரில் நடைபெற்ற இந்த நம்பிக்கைத் திருப்பயணத்தின்போது, டிசம்பர் 29, சனிக்கிழமை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இப்பயணத்தில் கலந்துகொண்ட 40,000க்கும் அதிகமான இளையோருடன் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் ஒரு சிறப்பு செப வழிபாட்டை மேற்கொண்டார்.
Taize குழுமத்திற்கும், Constantinople கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முதுபெரும் தலைவருக்கும் 1960களிலிருந்து நல்லுறவு விளங்குகிறது.
Taize குழுமத்தின் தற்போதையத் தலைவர் அருள்சகோதரர் Alois தலைமையில் மேற்கொள்ளப்படும் திருப்பயணம், இஸ்தான்புல் நகரின் Taksim வளாகத்தில் அமைந்துள்ள மூவொரு கடவுள் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் ஆலயத்தில் இவ்வியாழனன்று நடைபெற்ற மாலை வழிபாட்டுடன் ஆரம்பமானது.
இவ்வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்நகரின் பல்வேறு கிறிஸ்தவக் கோவில்களில் திருவிழிப்புச் சடங்குகள் நடைபெறும் என்றும், திருக்காட்சித் திருவிழாவான ஞாயிறன்று அனைத்து கிறிஸ்தவ சபைகளுடன் ஒன்றிப்பு கூட்டம் ஒன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.