2013-01-02 15:28:46

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


சன. 02, 2013. 2013ம் ஆண்டின் முதல் புதன் பொதுமறைபோதகம் வத்திக்கானிலுள்ள திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்குத் துவங்கியது. நம் மீட்புக்காக மனுவுரு எடுத்த புதிய ஆதாமாம் இயேசுவை, நம் இதயங்களில் வரவேற்போம் என்ற அழைப்புடன் தன் பொது மறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இவ்வுலகில் நம் வாழ்வை உருமாற்றவல்ல நம்பிக்கையைக் கொணரும் இயேசுவின் பிறப்பைச் சுற்றியிருக்கும் ஒளி குறித்து இந்தக் கிறிஸ்து பிறப்புக் காலத்தில் நாம் மகிழ்கிறோம் எனத் தன் புதன் பொதுமறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை. நம் மீட்புக்காக மனிதனாகப் பிறப்பெடுத்த இறைவனின் ஒரேமகனாம் இயேசுவின் தனித்தன்மை குறித்து ஆழ்ந்து சிந்திக்க ஒவ்வோர் ஆண்டும் இச்சிறப்புக் கொண்டாட்டங்கள் நம்மை அழைத்துச் செல்கின்றன. கன்னிமரியிடம் பிறந்த அவரே உண்மையில் இம்மானுவேல், 'கடவுள் நம்மோடு'. இறைவன் மனுவுரு எடுத்ததை நம் விசுவாச அறிக்கையில் நாம் வெளியிடும்போது நாம் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம். அன்னை மரியின் சுதந்திர விருப்ப ஒத்துழைப்புடன் தூய மூவொரு கடவுள் ஆற்றிய பணியே 'மனுவுருவெடுத்தல்' என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். மனுவுருவானது என்பது புதிய படைப்பின் துவக்கம். தூய ஆவியின் வல்லமையால் கருவில் உருவான இயேசு கிறிஸ்துவே புதிய ஆதாம். அவரே, திருமுழுக்குத் தண்ணீரின் வழி புதுப்பிறப்பை மனிதகுலத்திற்கு வழங்குகிறார். இதன் வழி நாம் வானகத்தந்தையின் புதல்வர், புதல்விகளாக மாறுகிறோம். புதிய படைப்பின் விடியலுக்கு மகிழ்வுநிறைச் சாட்சியாக விளங்கவும், நம் பலவீனங்களை உருமாற்றி பலத்தை வழங்கும் இறைவல்லமையை நம்மில் அனுமதிக்கவும் உதவும் பொருட்டு, இந்தப் புனித காலத்தில் நம் மீட்பரை இதயங்களில் வரவேற்போம்.
இவ்வாறு, தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.