2012-12-28 11:02:59

நேபாளத்தில் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மற்றும் புத்தமதத்தினர் சேர்ந்து கிறிஸ்மஸ் கொண்டாட்டம்


டிச.28,2012. திருமுழுக்கு என்ற திருவருட்சாதனத்தைப் பெற்றுள்ளவர்கள் என்பதாலேயே கிறிஸ்தவர்கள் நேபாளம் முழுவதும் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்புவதற்கு உரிமையையும் கடமையையும் கொண்டுள்ளார்கள் என்று காட்மண்டு ஆயர் அந்தோணி ஷர்மா கூறினார்.
காட்மண்டு விண்ணேற்பு அன்னைப் பேராலயத்தில் கிறிஸ்மஸ் நள்ளிரவுத் திருப்பலியில் மறையுரையாற்றிய ஆயர் ஷர்மா, நேபாளக் கிறிஸ்தவர்கள், கிறிஸ்து இவ்வுலகில் பிறந்ததற்குச் சாட்சிகளாக வாழவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
நேபாள அரசியல் தலைவர்களும் சமயத் தலைவர்களும் இன, வகுப்பு வேறுபாடுகளைக் களைந்து, நாட்டின் நலனுக்காக ஒன்றுசேர்ந்து உழைப்பதற்கு நல்ல வாய்ப்பாக, இந்தக் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவை நோக்குமாறும் பேராயர் கேட்டுக் கொண்டார்.
இக்கிறிஸ்மஸ் பெருவிழாத் திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மற்றும் புத்தமதத்தினர் கலந்து கொண்டனர்.
நேபாளம் 2008ம் ஆண்டுமுதல் கடும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் 2006ம் ஆண்டில் முடியாட்சி வீழ்ந்த பின்னர் இவ்வாண்டில் முதன்முறையாக கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் விழாக் கோலத்தில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.