திருத்தந்தை : புனித ஸ்தேவான் நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு ஓர் எடுத்துக்காட்டு
டிச.26,2012 . ஒவ்வோர் ஆண்டும்
கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவிற்கு அடுத்த நாள், திரு அவையின் முதல் மறைசாட்சியாம் புனித
ஸ்தேவான் திருவிழாவைச் சிறப்பிக்கின்றோம். புனித ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராகவும்,
தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்றவராகவும் இருந்தாரென திருத்தூதர் பணிகள் நூல் எடுத்துரைக்கின்றது.
அபாயகரமான சூழல்களிலும், பாதுகாப்பற்ற நிலைகளிலும் இயேசுவுக்கு அச்சமின்றி சான்று பகர
விசுவாசிகள் அழைக்கப்படுகின்றனர். ஏனெனில், 'அஞ்சவேண்டாம், அந்நேரத்தில் என்ன பேச வேண்டும்
என்பது உங்களுக்கு அருளப்படும். பேசுவது நீங்களல்ல, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள்
வழியாய்ப் பேசுவார்' என்ற இயேசுவின் வாக்குறுதி இப்புனிதரில் நிறைவேறியது. தூய ஆவியின்
வல்லமையின் துணைகொண்டு செயலாற்றி, பேசி, மரித்த தியாக்யோன் ஸ்தேவான், இறுதி நிமிடம் வரை
இயேசுவுக்குச் சான்று பகர்பவராக இருந்தார். அவர், தன் மரணத்திலும் இயேசுவின் மாதிரியை
பின்பற்றினார். இயேசு சிலுவையில் தொங்கியபோது செபித்ததுபோல் இவரும் தன் ஆவியை இயேசுவின்
கைகளில் ஒப்படைப்பதாகக் கூறி உயிர் விட்டார். அதுமட்டுமல்ல, தன்னைத் துன்புறுத்தியவர்கள்
சார்பில் இறைவனிடம் மன்றாடினார். அவர் சாகும் தறுவாயில் வானத்தை உற்று நோக்கியபோது, வானம்
திறந்திருப்பதையும் மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் கண்டார். கிறிஸ்து
பிறப்புப் பெருவிழா மகிழ்வில் இருக்கும் நாம், புனித ஸ்தேவானைப்போல் இறைமகனில் நம் பார்வையைத்
திருப்பி, இறைவன் மனுவுருவான மறையுண்மை குறித்து ஆழ்ந்து தியானிப்போம். திருஅவை வழங்கும்
அருளடையாளங்கள் வழி ஊக்கம்பெற்று, இயேசு கிறிஸ்துவோடு நெருங்கிய இணைப்பைக் கொண்டுள்ள
நம்மில் தன் மீட்புபணிகளைத் தொடர அவர் ஆவல் கொள்கிறார். புனித ஸ்தேவானைப்போல் நாமும்
ஒளிக்கென நம் வாழ்வைத் திறந்து, நன்மையின் பாதையில் நடந்து, இறையன்பின் திட்டத்திற்கு
இயைந்த மனித குலத்தைப் படைக்க உதவுவோம். இறுதியாக, புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியில்
ஈடுபடவிரும்பும் அனைவருக்கும் புனித ஸ்தேவான் ஓர் எடுத்துக்காட்டாக உள்ளார். எடுத்துரைக்கும்
முறைகளும் தொழில்நுட்பங்களூம் இப்பணியில் ஓரளவு உதவினாலும், தூய ஆவியின் வழிநடத்தலின்
இன்றியமையாமைக் குறித்தும் இப்புனிதர் நமக்குக் காட்டுகின்றார். இப்புதிய நற்செய்தி அறிவித்தல்,
இயேசுவை உயிரூட்டமுள்ள முறையில் மற்றவர்களுக்கு எடுத்துச் செல்வதைக் குறிக்கின்றது. இந்த
நம்பிக்கையின் ஆண்டில் இயேசுவுக்குத் துணிவுடன் சான்று பகரும் மக்கள் அதிகரிக்க உதவுமாறு
அன்னை மரியின் பரிந்துரையை வேண்டுவோம். இவ்வாறு தன் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை
16ம் பெனடிக்ட் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித் தார்