குளிப்பதற்கு கூட தகுதியில்லாத இந்திய புண்ணிய நதிகள் : அதிர்ச்சி தகவல்
டிச.26,2012. இந்தியாவின் வடமாநிலங்களில் பாயும் கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள், குளிப்பதற்கு
ஏற்ற தகுதிகூட இல்லாத அளவிற்கு மாசடைந்துள்ளதாக அரசு சாரா அமைப்பு மூலம் நடத்தப்பட்ட
ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் அனில்
ஜோஷி தலைமையில், டேராடூனில் இயங்கி வரும் ஹெஸ்கோ (HESCO) என்ற அரசுசாரா அமைப்பு, இந்தியாவின்
வடமாநிலங்களான உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் ஓடும் நதிகள் குறித்து ஆய்வு நடத்தும்
பொருட்டு, அப்பகுதிகளில் 27 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. உத்தரபிரேதசம், பீகார்
உள்ளிட்ட மாநிலங்களில் ஒடும் நதிகளில் பெருமளவு சாக்கடை நீரே ஓடுகிறது. இதன்மூலம், அந்நதிகளைச்
சார்ந்து வாழும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை
ஏற்பட்டுள்ளது என்று அனில் ஜோஷி கூறினார். தாங்கள் மேற்கொண்ட ஆய்வின் அனைத்து விவரஙகளையும்
ஓர் அறிக்கையாக தயாரித்து பிரதமர் அலுவலகம் மற்றும் அனைத்து மாநில முதல்வர்களுக்கும்
விரைவில் அனுப்ப உள்ளதாக ஜோஷி கூறினார்.