நாகசாகி பேராயர் : கிறிஸ்மஸ் காலத்தில் அதிகத் துன்பங்களை எதிர்நோக்கும் மக்கள்மீது அக்கறை
காட்ட அழைப்பு
டிச.22,2012. அதிகத் துன்பங்களை எதிர்நோக்கும் மக்கள்மீது அக்கறை காட்டி அவர்களுக்காகச்
செபிப்பதற்குத் திருவருகைக் காலமும் கிறிஸ்மஸ் தினமும் சிறந்த காலங்கள் என்று ஜப்பானின்
நாகசாகி பேராயர் Joseph Mitsuaki Takami கூறினார். பொருளாதார நெருக்கடி மற்றும் அணுசக்திக்
கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களே ஜப்பானில் அதிகம் துன்புறும் மக்களாக இருக்கின்றார்கள்
என்று குறிப்பிட்ட பேராயர் Takami, இந்தக் கிறிஸ்மஸ் காலத்தில் நமது எண்ணங்களும் செபங்களும்
துன்புறும் இம்மக்களை அதிகம் நினைப்பதாக இருக்க வேண்டுமெனக் கூறினார். தனது உயர்மறைமாவட்டத்தில்
கிறிஸ்மஸ் சிறப்பிக்கப்படும் விதம் குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த
நாகசாகி பேராயர் Takami, முந்தைய ஆண்டுகளைவிட இவ்வாண்டில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் சிறப்பாக
இருக்காது என்று கூறினார். அணுசக்திக்கு எதிரான மக்களின் குரல் இக்காலத்தில் ஓங்கி
ஒலிக்கின்றது என்றும் கூறிய பேராயர், அரசியல் மற்றும் அணுசக்தி குறித்த விவகாரங்களில்
ஜப்பான் நாடு கடுமையான தருணத்தை எதிர்கொள்கின்றது என்றும் கூறினார்.