திருத்தந்தை : குடும்பமும் உரையாடலும் இக்காலத் திருஅவைக்குச் சவால்களாக உள்ளன
டிச.21,2012. குடும்பத்தைப் பாதுகாப்பது என்பது மனிதரையே பாதுகாப்பதாகும், கடவுள் புறக்கணிக்கப்படும்போது
மனித மாண்பும் மறைகின்றது என்பது தெளிவாகத் தெரிகிறது, கடவுளுக்காகப் பரிந்துபேசும் எவரும்
மனிதருக்காகப் பரிந்து பேசுகிறார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். திருப்பீடத்
தலைமையகத்தின் உறுப்பினர்களை வத்திக்கானிலுள்ள கிளமெந்தினா அறையில் இவ்வெள்ளிக்கிழமை
முற்பகலில் சந்தித்து கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டு உரையாற்றிய திருத்தந்தை,
குடும்ப விழுமியங்கள் குறித்த கருத்துக்களை மிக அதிகமாகவும் ஆழமாகவும் வலியுறுத்திப்
பேசினார். இந்த 2012ம் ஆண்டு நிறைவடையவிருக்கும் இந்நாள்களில், அனைத்துவிதமான இன்னல்நிறைந்த
சூழல்களையும், முக்கியமான கேள்விகளையும், சவால்களையும் நாம் பார்க்கிறோம், அதேசமயம் திருஅவையிலும்
உலகிலும் நம்பிக்கையின் அடையாளங்களையும் காண்கிறோம் என்றும் திருத்தந்தை கூறினார். இவ்வாண்டில்
திருஅவை மற்றும் தனது பாப்பிறைப்பணி வாழ்வில் நடந்த சில முக்கியமானவைகளைக் குறிப்பிட
விரும்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை, மெக்சிகோ, கியூபா, லெபனன் ஆகிய நாடுகளுக்குத்
தான் திருப்பயணம் மேற்கொண்டதையும், புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்து இடம்பெற்ற
13வது உலக ஆயர்கள் மாமன்றம் பற்றியும், மிலானில் இடம்பெற்ற அனைத்துலகக் குடும்ப மாநாட்டில்
தான் கலந்து கொண்டதையும் குறிப்பிட்டுப் பேசினார். குடும்பக் கட்டமைப்பு இன்னும் உறுதியாகவும்
உயிரோட்டத்துடனும் இருக்கின்றது என்பதை மிலான் மாநாட்டில் உணர முடிந்தது, எனினும், குடும்பத்தின்
அடித்தளங்களை அச்சுறுத்தும் நெருக்கடிகள், குறிப்பாக, மேற்கத்திய உலகில் இருக்கின்றன
என்பதை மறுக்க முடியாது என்றும் திருத்தந்தை கூறினார். இன்றைய உலகில் எந்தவித அர்ப்பணத்துக்கும்
புறக்கணிப்பு பரவலாக இருக்கின்றது, இது குடும்ப வாழ்வுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது
எனவும், தன்னையே வழங்குவதில் மனிதர் தனது மனிதத்தின் மூச்சைக் கண்டுகொள்கிறார், இத்தகைய
அர்ப்பணம் உதறித்தள்ளப்படும்போது, அப்பா, அம்மா, குழந்தை ஆகிய அடிப்படைக் கூறுகள் அழிகின்றன
என்றும் திருத்தந்தை கூறினார். இன்று பாலியல் என்பது அதன் இயல்பான தன்மையிலிருந்து
விலகி, நமக்கு நாமே தேர்ந்தெடுக்கிறோம் என்ற சமூகப் பங்குக்குக் குறைக்கப்பட்டுள்ளது
என்றும் அவர் கூறினார். மேலும், புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி மற்றும் உரையாடல்
குறித்த மூன்று முக்கிய கூறுகள் குறித்தும் தனது கிறிஸ்மஸ் உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை.