2012-12-20 15:34:53

திருத்தந்தை : ஒளியில் எப்போதும் நடக்க வேண்டுமெனில், இறை வார்த்தையின் வழி நடக்க வேண்டும்


டிச.20,2012. ஒவ்வொருவரின் விசுவாச வாழ்விலும் ஒளி நிறைந்த நேரங்கள் இருப்பதுபோல், இருளான நேரங்களும் உள்ளன. ஒளியில் நாம் எப்போதும் நடக்க வேண்டுமெனில், இறை வார்த்தையின் வழி நடக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் Twitter செய்தியில் கூறினார்.
இப்புதனன்று தன் மறைபோதகத்தை முடித்தபின், திருத்தந்தை இரு Twitter செய்திகளை அனுப்பினார். அவற்றில் ஒன்று விசுவாசத்தையும் இறை வார்த்தையையும் இணைத்து அவர் வெளியிட்ட செய்தி. மற்றொரு செய்தியில் திருத்தந்தை இறையன்னை மரியாவைப் பற்றி எடுத்துரைத்தார்.
இறைமகனின் வருகையை எதிர்பார்த்திருந்த அன்னை மரியா, தான் இறைவனுடன் கொண்டிருந்த ஆழ்ந்த உறவிலிருந்து தன் முழுமையான மகிழ்வைப் பெற்றார் என்று திருத்தந்தை தன் அடுத்த செய்தியில் குறிப்பிட்டார்.
இதுவரை திருத்தந்தை Twitter வழி ஆறு செய்திகள் அனுப்பியுள்ளார். Twitter வழியாக திருத்தந்தையைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்து 70 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இவர்களில் 12 இலட்சம் பேர் ஆங்கிலத்திலும், 4 இலட்சத்து 65 ஆயிரம் பேர் ஸ்பானிய மொழியிலும், 2 இலட்சம் பேர் இத்தாலிய மொழியிலும் திருத்தந்தையை pontifex என்ற இணையதள முகவரி மூலம் தொடர்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.