வத்திக்கான் உடைமைகளை நிர்வாகம் செய்வதில் வெளிப்படையான வழிமுறைகள் வளர்க்கப்படவேண்டும்
- கர்தினால் பெர்தோனே
டிச.19,2012. அகில உலகத் திருஅவையின் பணிகளுக்குப் பயன்படுவதற்கு வத்திக்கான் உடைமைகள்
உள்ளன என்றும் இவ்வுடமைகளை நிர்வாகம் செய்வதில் இன்னும் வெளிப்படையான வழிமுறைகள் வளர்க்கப்படவேண்டும்
என்றும் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே கூறினார். திருப்பீடத்தின்
நிதித்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றங்களைக் குறித்து இச்செவ்வாயன்று
அத்துறையைச் சார்ந்தவர்களுக்கு உரை நிகழ்த்திய கர்தினால் பெர்தோனே, துல்லியமாகவும், வெளிப்படையாகவும்
நிதித்துறை இயங்க வேண்டும் என்ற இரு கருத்துக்களை வலியுறுத்தினார். இவ்வுலக உடமைகள்
நிரந்தரமற்றவை என்ற கண்ணோட்டம் திருஅவையில் எப்போதுமே நிலவி வந்துள்ளது என்பதை எடுத்துரைத்த
கர்தினால் பெர்தோனே, திருத்தந்தை ஆறாம் பவுல் காலத்திலிருந்து நிதித்துறையில் உருவாகிவந்துள்ள
மாற்றங்களையும் சுட்டிக்காட்டினார். உலகெங்கும் நிதி நிறுவனங்களில் கடைபிடிக்கப்படும்
வெளிப்படையான வழிமுறைகள், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் முதல் திருப்பீடத்தாலும் கடைபிடிக்கப்படுவதைத்
தன் உரையில் சுட்டிக்காட்டிய திருப்பீடச் செயலர், இந்த வழிமுறையைத் தொடர்ந்து கடைபிடிப்பதில்
கவனமும், தெளிவும் அதிகம் தேவை என்று கூறினார். திருஅவையின் பல்வேறு பணிகள் உலகெங்கும்
பாராட்டப்படுவதுபோல், அதன் நம்பகத் தன்மையும் மக்களின் பாராட்டையும், மதிப்பையும் பெறவேண்டும்
என்று தன் உரையின் இறுதியில் கர்தினால் பெர்தோனே வலியுறுத்தினார்.