பாலஸ்தீன கிறிஸ்தவர்கள் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாட தயாராக உள்ளனர் - எருசலேம்
துணை ஆயர்
டிச.19,2012. 2012ம் ஆண்டில் பாலஸ்தீன கிறிஸ்தவர்கள் மனதில் நல்ல உணர்வுகளும், வருத்தமான
உணர்வுகளும் நிறைந்திருந்தாலும், கிறிஸ்து பிறப்பு விழா ஓர் ஆன்மீக விழா என்பதால், இவ்விழாவைக்
கொண்டாட மக்கள் தயாராக உள்ளனர் என்று எருசலேம் துணை ஆயர் William Shomali கூறினார். கிறிஸ்மஸ்
விழா நெருங்கி வரும் வேளையில், உலகின் பல நாடுகளில் இருந்தும் பயணிகள் பாலஸ்தீன நாட்டில்
உள்ள கிறிஸ்து பிறப்பு ஆலயத்தைக் காண வருவது வழக்கம். அண்மையில், இஸ்ரேல் நாட்டுக்கும்,
பாலஸ்தீன நாட்டுக்கும் இடையே ஏற்பட்ட தாக்குதல்களால், பயணிகளின் வரவு பெருமளவு குறைந்துள்ளது. இந்நிலை
குறித்து Aid to the Church in Need என்ற பிறரன்பு அமைப்புக்கு, இச்செவ்வாயன்று பேட்டியளித்த
ஆயர் Shomali, உலக நாடுகளின் தலையீட்டால், இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சனைகள் பெருமளவு தீர்ந்துள்ளது
என்று கூறினார். பாலஸ்தீனம் ஒரு தனி நாடென்று ஐ.நா.பொது அவையால் ஏற்கப்பட்டது அங்குள்ள
கிறிஸ்தவர்களுக்குப் பெரும் மகிழ்வைத் தந்துள்ளது என்றாலும், சிரியா போன்ற அண்மைய நாடுகளில்
இன்னும் தொடரும் இறுக்கமானச் சூழல் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களைப் பெருமளவில் பாதிக்கின்றன
என்று ஆயர் Shomali சுட்டிக்காட்டினார்.