பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து கொடுத்தவர்கள் சுட்டுக் கொலை
டிச.19,2012. பாகிஸ்தானில் பெஷாவரின் புறநகர்ப் பகுதிகளில் போலியோ நோய்க்கு எதிரான தடுப்பு
மருந்து வழங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மூன்று இடங்களில் இப்புதனன்று மேலும் தாக்குதல்கள்
நிகழ்ந்துள்ளன. இத்திங்களன்று அந்நாட்டில் போலியோ நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து
வழங்கிக் கொண்டிருந்த ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நாட்டின் மிகப் பெரிய நகரான
கராச்சியில் நடைபெற்ற இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் நான்கு பேர் பெண்கள். அந்நாட்டில்
பரந்துபட்ட அளவில் போலியோ நோய் காணப்படும் நிலையில், அதை ஒழிக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள்
அமைப்பின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட திட்டம், இத்தாக்குதலை அடுத்து, நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை
எந்தக் குழுவும் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை என்றாலும், தடுப்பு மருந்துகள்
மூலம் போலியோ நோய் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தாலிபான்கள் அச்சுறுத்தல் விடுத்திருந்தனர். நோய்
தடுப்பு நடவடிக்கை எனும் பெயரில் அன்னிய நாடுகள் உளவு வேலை பார்ப்பதற்கும், முஸ்லிம்களிடையே
குடும்பக் கட்டுப்பாட்டை செயல்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தாலிபான்
தலைவர்கள் கூறுகிறார்கள். ஆப்கானிஸ்தான், நைஜீரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலேயே உலகளவில்
இன்னும் போலியோ நோய் அதிக அளவில் உள்ளது என்பது ஐ.நா.வின் கணிப்பு.