2012-12-19 15:33:20

நமது நம்பிக்கை, வரலாற்றிலிருந்து நம்மைப் பிரிப்பதில்லை, மாறாக, வரலாற்றோடு நம்மை ஆழமாகப் பிணைக்கிறது - கர்தினால் Bagnasco


டிச.19,2012. கிறிஸ்மஸ் விழா நெருங்கிவரும் இந்நாள்களில் பல்வேறு உணர்வுகள் நம் மனதில் எழும் அதே வேளையில், நமது நம்பிக்கை உணர்வுகளுக்கும் நாம் இடம் தருகிறோம் என்று இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Angelo Bagnasco கூறினார்.
நெருங்கிவரும் கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி இத்தாலியப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரோம் நகரில் இச்செவ்வாய் மாலையில் திருப்பலி நிகழ்த்தி மறையுரை ஆற்றிய கர்தினால் Bagnasco, நம்பிக்கை ஆண்டில் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் விழா தனி சிறப்பு பெறுகிறது என்று கூறினார்.
நமது நம்பிக்கை, வரலாற்றிலிருந்து நம்மைப் பிரிப்பதில்லை, மாறாக, வரலாற்றோடு நம்மை இன்னும் ஆழமாகப் பிணைக்கிறது என்று கூறிய கர்தினால் Bagnasco, மனிதர்களின் மாண்பை வரலாற்றில் நிலைநாட்டும் ஒரு முக்கிய கருவியாக நமது நம்பிக்கை செயல்படுகிறது என்றும் எடுத்துரைத்தார்.
கிறிஸ்மஸ் அலங்காரங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் விளக்குகளைப் பற்றி குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் Bagnasco, நிரந்தரமான ஒளியாக இருக்கும் கிறிஸ்துவை நோக்கி நாம் பயணம் செல்கிறோம் என்பதையும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் மறப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
அரசியல் வழியாக நாட்டுப்பணிகளை மேற்கொண்டுள்ள நீங்கள் பல இன்னல்கள் இடையிலும் நம்பிக்கை தளராமல் உங்கள் பணிகளை மேற்கொள்ள, நம் மத்தியில் மனிதராகப் பிறந்து, நம்முடன் பயணிக்கும் இறைமகன் உதவுவாராக என்று கர்தினால் Bagnasco அங்கு கூடியிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களை வாழ்த்தினார்.








All the contents on this site are copyrighted ©.