கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே : தன்னலத்தைக் கடந்து, உண்மையில் வாழ முயற்சிப்போம்
டிச.18,2012. துன்பங்களைத் தாங்குவதில் வளருதல், அன்பு செய்வதற்கான சக்தியில் வளருவதாகும்
என்பது சிறாருக்குக் கற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென்று திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சிசியோ
பெர்த்தோனே கூறினார். இச்செவ்வாயன்று உரோம் பம்பினோ ஜேசு குழந்தைகள் மருத்துவமனைக்குச்
சென்று அங்கு பணியாற்றுவோர் மற்றும் நோயாளிக் குழந்தைகளுடன் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப்
பகிர்ந்து கொண்டு உரையாற்றிய கர்தினால் பெர்த்தோனே இவ்வாறு கூறினார். குழந்தைகள் தங்களது
கேள்விகளுக்கானப் பதிலை அவர்கள் காண வேண்டியிருக்கிறது, சிறுகுழந்தைகூட அறிவதற்கும் புரிந்து
கொள்வதற்கும் விரும்புகிறது, இதில் வயது வந்தோர் அவர்களுக்கு உதவ வேண்டுமென்றும் கர்தினால்
கேட்டுக் கொண்டார். தன்னலத்தில் வாழும்வரை கிறிஸ்துவுக்கு முன்னான காலத்தில் வாழ்கிறோம்
என்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் கூற்றையும் குறிப்பிட்ட கர்தினால் பெர்த்தோனே,
ஒவ்வொருவரும் தன்னலத்தைக் கடந்து, மீட்பரின் பிறப்போடு திறந்துள்ள புதிய சகாப்தத்தின்
உண்மையில் வாழ முயற்சிப்போம் எனவும் கூறினார்.