கர்தினால் Filoni : ஆப்ரிக்காவில் மறைப்பணியாற்றுவோர் தூய ஆவியின் வல்லமையால் வழிநடத்தப்படுவார்களாக
டிச.18,2012. ஆப்ரிக்கத் திருஅவையின் நலனுக்காக மறைப்பணி செய்வோர் தூய ஆவியின் வல்லமையால்
வழிநடத்தப்படுவதற்குத் தான் செபிப்பதாகத் தெரிவித்தார் நற்செய்தி அறிவிப்புப் பேராயத்
தலைவர் கர்தினால் Fernando Filoni. ஆப்ரிக்காவின் உகாண்டா நாட்டின் வடபகுதியில் நற்செய்தி
அறிவிக்கப்பட்டதன் நூறாம் ஆண்டுக் கொண்டாட்டங்களை நிறைவு செய்த திருப்பலியில் இவ்வாறு
மறையுரையாற்றிய கர்தினால் Filoni, உகாண்டாவை ஆட்சி செய்யும் அரசியல் மற்றும் பழங்குடி
இனத் தலைவர்கள்மீது உயிர்த்த ஆண்டவரின் ஆசீர்வாதங்கள் நிரம்பட்டும் எனவும் வாழ்த்தினார். 1912ம்
ஆண்டின் தொடக்க காலத்தில் உகாண்டாவின் வடபகுதிக்கு முதன் முதலில் நற்செய்தியை எடுத்துச்
சென்ற கொம்போனி மறைபோதக சபையினரைச் சிறப்பாகக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்த கர்தினால்
Filoni, இந்தப் பகுதியில் தங்களது எடுத்துக்காட்டான வாழ்க்கையால் நற்செய்தியை அறிவிப்பதற்குத்
தங்கள் வாழ்வையே தியாகம் செய்த புனிதர்கள் Daudi Okelo, Jildo Irwa , மறைசாட்சிகளாக உயிர்நீத்த
வேதியர்கள் மற்றும் பலரையும் நன்றியோடு நினைவுகூர்ந்தார். உகாண்டாவின் குருக்கள்,
துறவிகள், பொது நிலையினர் ஆகிய அனைவரும் இந்த நம்பிக்கை ஆண்டில் தங்களது கிறிஸ்தவ விசுவாசத்தில்
இன்னும் ஆழப்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.