டிச.17,2012. பாலஸ்தீனப் பகுதியின் இன்றைய நிலைகள் குறித்து திருத்தந்தையையும் திருப்பீடச்செயலரையும்,
நாடுகளுடன் ஆன உறவுகளுக்கானத் துறையின் செயலரையும் இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து
உரையாடினார் பாலஸ்தீனத் தலைவர் Mahmoud Abbas பாலஸ்தீனம், உறுப்பினரற்ற பார்வையாளராக
ஐ.நா. பொதுஅவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறித்து திருப்பீட அதிகாரிகளுடன் இடம்பெற்ற
கலந்துரையாடலில், இந்த அங்கீகாரம் வழி பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான மோதல்களுக்குத்
தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என உரைக்கப்பட்டது. அதேவேளை இவ்விருதரப்பினரிடையே
பேச்சுவார்த்தைகள் மீண்டும் துவக்கப்படவேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. பல்வேறு
மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மத்தியக்கிழக்குப்பகுதியில் ஒப்புரவையும் அமைதியையும்
ஊக்குவித்தல், பொதுநலனுக்கென கிறிஸ்தவ சமூகம் மத்தியக்கிழக்குப் பகுதியில் ஆற்றவல்லப்
பணிகள் ஆகியவைகள் குறித்தும் இத்திங்கள் கலந்துரையாடலில் ஆலோசிக்கப்பட்டது எனத் திருப்பீடம்
வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.