திருத்தந்தை : தொடர்ந்த உறுதிப்பாடு, பொறுமை மற்றும் தாழ்ச்சியே வெற்றியின் இரகசியம்
டிச.17,2012. எந்த ஒரு போட்டியிலும் நியாயமான அணுகுமுறைகள், உடலை மதிப்புடன் பேணுதல்,
போட்டியாளர்களுடன் கொள்ளும் ஒருமைப்பாட்டுணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்தி, அவற்றின் வழியாக,
மகிழ்வு, மனநிறைவு, மற்றும் கொண்டாட்டங்களை மேற்கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட். 2012ம் ஆண்டு இலண்டன் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்கள்,
மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆகிய நிகழ்வுகளில் கலந்து கொண்ட
இத்தாலிய ஒலிம்பிக் அவையின் உறுப்பினர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தத்
திருத்தந்தை, தொடர்ந்த உறுதிப்பாடு, பொறுமை மற்றும் தாழ்ச்சியே வெற்றியின் இரகசியம் என்று
எடுத்துரைத்தார். விளையாட்டுக்கள் மனிதருக்கு நல்லவைகளைக் கற்பித்து, அவர்கள் தங்களையே
ஆழமாக அறிந்து கொள்ள உதவுகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை. மனித உணர்வுகளை நன்முறையில்
வடிவமைக்கவும், ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும், மனித நேய உணர்வை வளர்க்கவும் உலகளாவிய
விளையாட்டுக்கள் உதவுகின்றன என்று மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.