டிச.16, திருவருகைக் காலம் - 3ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை
"The Little Prince"
(by Antoine de Saint-Exupery) என்பது ஒரு கற்பனைக் கதை. அரிதான, அழகான கற்பனை. வெளி
உலகத்திலிருந்து நம் பூமிக்கு வந்து சேரும் ஒரு குட்டி இளவரசனின் கதை. அந்தக் கதையில்
வரும் இளவரசன் ஒரு நரியைச் சந்திக்கிறான். நட்பு மலர்கிறது. ஒருநாளே நிகழ்ந்த சந்திப்பிற்கு
பின், அடுத்த நாள் சிறுவன் வந்ததும் நரி அவனிடம் உரிமையாய், "நீ நேற்று வந்த நேரத்திற்கே
வந்திருந்தால், ரொம்ப நன்றாக இருந்திருக்கும்." என்று சொல்கிறது. ஏன் அதே நேரத்திற்கு
வரவேண்டும் என்று கேட்கும் இளவரசனுக்கு நரி சொல்லும் விளக்கம் அழகானது. "உதாரணத்திற்கு,
நீ நாலு மணிக்கு வருவாய் என்று உறுதியாக எனக்குத் தெரிந்தால், நான் மூன்று மணிக்கே மகிழ்வில்
துள்ளி குதிக்க ஆரம்பித்துவிடுவேன். நீ ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நேரத்திற்கு வந்தால்,
என் மனம் தயாராக, மகிழ்வாக இருக்க முடியாதே" என்று நரி சொல்கிறது. நிகழ்ச்சிக்கு முன்
மகிழ்ச்சி. நடக்கப் போகும் நல்லதொரு நிகழ்வுக்காக, அல்லது, மனதுக்குப் பிடித்த ஒருவரைச்
சந்திப்பதற்காகக் காத்திருக்கும் நேரம் மிக ஆனந்தமானது. இதை எல்லாரும் வாழ்வில் உணர்ந்திருப்போம்.
காத்திருக்கும் ஆனந்தத்தைத் தருவது திருவருகைக் காலம். திருவருகைக் காலத்தின் மூன்றாம்
ஞாயிறு இது. இந்த ஞாயிறை, Gaudete Sunday அதாவது, மகிழும் ஞாயிறு என்று கொண்டாடுகிறோம்.
கிறிஸ்து பிறப்புக்கு இன்னும் பத்து நாட்கள் இருக்கும்போதே மகிழ்வைப்பற்றி அழுத்தமாகக்
கூறுகின்றன இன்றைய முதலிரு வாசகங்கள்:
இறைவாக்கினர் செப்பனியா 3:
14-18 அ மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி: இஸ்ரயேலே! ஆரவாரம் செய்:
மகளேஎருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி.ஆண்டவர் உன்தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்:
உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்: இஸ்ரயேலின்அரசராகிய
ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்: நீ இனி எந்தத் தீங்கிற்கும்அஞ்சமாட்டாய்.அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: சீயோனே,
அஞ்சவேண்டாம்: உன் கைகள்சோர்வடைய வேண்டாம்.உன் கடவுளாகியஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்:
அவர் மாவீரர்: மீட்பு அளிப்பவர்: உன்பொருட்டுஅவர் மகிழ்ந்து
களிகூருவார்: தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்: உன்னைக்குறித்து
மகிழ்ந்து ஆடிப்பாடுவார். அது திருவிழாக் காலம்போல் இருக்கும்.
பிலிப்பியருக்கு
எழுதிய திருமுகம் 4: 4-7 சகோதரர் சகோதரிகளே,
ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்.கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர்
அண்மையில்உள்ளார்.எதைப்பற்றியும்
கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டுஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள்.அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து
இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும்மனத்தையும் பாதுகாக்கும்.
சென்ற
வாரம் நாம் சிந்தித்த நற்செய்தியின் ஒரு தொடர்ச்சியை இந்த வாரம் சிந்திக்கிறோம். "இறைவன்
வருகிறார். சந்திக்கத் தயாராகுங்கள்." என்ற தொனியில் திருமுழுக்கு யோவானின் குரல் பாலைவனத்தில்
ஒலித்ததாக போன வாரம் நற்செய்தியில் வாசித்தோம். இறைவனைச் சந்திக்க நாங்கள் என்ன செய்ய
வேண்டும்? என்று யோவானைச் சுற்றி இருந்த மக்கள் கேட்ட கேள்விகளையும், அதற்கு திருமுழுக்கு
யோவான் தந்த பதில்களையும் இன்று சிந்திக்க வந்துள்ளோம். இறைவனை நாம் சந்திக்கிறோம். வாழ்வின்
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் சந்திக்கிறோம். இந்த சந்திப்புகளின் உச்சமாக, நம் வாழ்வின்
முடிவில் அவரைக் கட்டாயம் சந்திப்போம். அந்தச் சந்திப்பு எப்படி இருக்கும்?
பிலிப்
நேரி என்ற புனிதரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி இக்கேள்விக்கு விடை தருகிறது. புனித
பிலிப் நேரி 16ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் இறந்து இருபது ஆண்டுகளில் அருளாளராகவும்,
இன்னும் ஏழு ஆண்டுகள் சென்று புனிதராகவும் உயர்த்தப்பட்டவர். மகிழ்வு, சிரிப்பு, நகைச்சுவை
இவற்றிற்கு பாதுகாவலர் என்று இவர் போற்றப்படுகிறார். இவர் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும்
ஒரு சம்பவம் இவரது நகைச்சுவைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இறைவனை நாம் எவ்விதம் சந்திப்பது
என்ற கேள்விக்கும் இது ஒரு நல்ல பதில்... புனித பிலிப் நேரி ஒருநாள் நண்பர்களுடன் பொழுதுபோக்காக
சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சாவைப்பற்றிய பேச்சு அங்கு எழுந்தது. நண்பர்களில்
ஒருவர் பிலிப்பிடம், "பிலிப், இதோ, அடுத்த நிமிடமே நீ இறக்கப்போகிறாய் என்று தெரிந்தால்,
என்ன செய்வாய்?" என்று கேட்டார். ஒரு நிமிட அமைதிக்குப் பின், பிலிப் அவரிடம், "தொடர்ந்து
சீட்டு விளையாடிக் கொண்டிருப்பேன்." என்றாராம். மரணத்தை, பயங்கரமான ஒரு மாற்றமாக,
முடிவாகப் பார்ப்பவர்கள் அதைக்கண்டு பயப்படலாம். காரணம்? அவர்களது வாழ்வுக்கும், சாவுக்கும்
ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கலாம். இந்த முரண்பாடுகளையெல்லாம் சரிசெய்துவிட்டு, மரணத்தைச்
சந்திக்க அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. ஆனால், வாழ்வு முழுவதையும் நல்ல விதமாக
வாழ்பவர்களுக்குச் சாவு எந்த வகையிலும் பயத்தை உண்டாக்காது என்பதற்கு புனித பிலிப் நேரி
ஒரு நல்ல எடுத்துக்காட்டு. சாவின் வழியாகத் தன்னைச் சந்திக்கப் போவது, அல்லது, தான் சென்று
சரணடையப் போவது இறைவனே என்று தெரிந்தபிறகு ஏன் பயம், பரபரப்பு எல்லாம்? தேவையில்லையே.
பிலிப் நேரியைப் பொறுத்தவரை நான் இப்படியும் கற்பனை செய்து பார்க்கிறேன். அந்த நண்பர்
சொன்னது போலவே, சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும்போது அவருக்கு மரணம் நேரிட்டால், மறு
வாழ்வில் அந்த இறைவனோடு தன் விளையாட்டைத் தொடர்ந்திருப்பார் பிலிப். இந்த நிலை எல்லாருக்கும்
கிடைக்கும் ஒரு பாக்கியம் அல்ல. புனித பிலிப் நேரியைப் போல் எவ்வித பயமும் இன்றி இறைவனைச்
சந்திக்க நாம் என்ன செய்யவேண்டும்?
இதையொத்தக் கேள்வியைத்தான் மக்கள் திருமுழுக்கு
யோவானிடம் எழுப்புகிறார்கள். அவர்கள் கேள்விகளுக்கு, "சாக்குத் துணி அணிந்து, சாம்பல்
பூசி, சாட்டைகளால் உங்களையே அடித்துக் கொண்டு கடும் தவம் செய்யுங்கள்." என்ற பதிலை யோவானிடமிருந்து
எதிர்பார்த்தனர் மக்கள். ஏனெனில் யோவானே அத்தகைய கடும் தவங்களைச் செய்து வருகிறவர். ஆனால்,
யோவான் கூறிய பதில் மிக எளியது. இதோ இன்றைய நற்செய்தியில் ஒலிக்கும் கேள்விகளும் பதில்களும்: லூக்கா
நற்செய்தி 3: 10-18 அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் போதித்துக்
கொண்டிருந்தபோது, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?”
என்று கூட்டத்தினர் அவரிடம்கேட்டனர்.அதற்கு அவர் மறுமொழியாக, “இரண்டு அங்கிகளை
உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்துகொள்ளட்டும்;
உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்” என்றார்.வரி தண்டுவோரும்திருமுழுக்குப் பெற வந்து,
“போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?”
என்று அவரிடம்கேட்டனர்.அவர்,
“உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்”
என்றார்.படைவீரரும் அவரை நோக்கி,
“நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர்.
அவர், “நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்;
யார்மீதும் பொய்க் குற்றம்சுமத்தாதீர்கள்;
உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்” என்றார்.
யோவானின்
பதில்கள் இன்று நமக்கும், நம்மைச் சுற்றி சமுதாயத்தின் பல நிலைகளில் இருப்பவருக்கும்
சொல்லப்பட்டதுபோல் ஒலிக்கிறது. கிறிஸ்மஸ் விழா கூட்டங்களால் நிறைந்திருக்கும் நமது பேரங்காடிகளுக்கு
திருமுழுக்கு யோவான் இன்று வந்தால் என்ன சொல்வார், எவ்வகை கேள்விகள் எழுப்புவார் என்று
சென்ற வாரம் சிந்தித்தோம். இன்று மீண்டும் அதே கேள்வியை எழுப்புகிறோம். இன்று நம் நடுவே
திருமுழுக்கு யோவான் வருகிறார் என்று எண்ணிப் பார்ப்போம். "இறைமகனைச் சந்திக்க நாங்கள்
என்ன செய்யவேண்டும்?" என்று அவரிடம் நாம் கேள்வி எழுப்பினால், அவர் அன்று சொன்னதையே மீண்டும்
நமக்குச் சொல்வார்: “உடை, உணவு உடையவர்கள் இல்லாதாரோடு பகிர்ந்து கொள்ளுங்கள்... எவரையும்
அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள்
ஊதியமே போதும் என்றிருங்கள்” என்ற எளிமையான வழிகளையே அவர் மீண்டும் சொல்வார்.
வாழ்வின்
அடிப்படை உண்மைகள் மிக மிக எளிமையானவை. அவற்றைத் தேடி எங்கும் செல்லவேண்டாம், அவை நம்மைத்
தேடி வருகின்றன, அவை நம்மைச் சுற்றியே எப்போதும் உள்ளன. நாம்தான் அவற்றைக் காணத் தவறுகிறோம்.
இந்த அற்புத பாடத்தைச் சொல்லும் விழாதானே கிறிஸ்மஸ்! கடவுளைத் தேடி காடு, மலை, பாலைநிலம்
என்று இஸ்ரயேல் மக்கள் அலைந்தபோது, அவர் ஒரு பச்சிளம் குழந்தையாய் மக்கள் மடியில் வந்து
அமர விரும்பினார். கடவுளை இவ்வளவு எளிமையாய் காண முடியும், அடைய முடியும் என்று சற்றும்
கற்பனை செய்து பார்க்கமுடியாத அம்மக்கள், இக்குழந்தை கடவுளாக இருக்கமுடியாது என்று தீர்மானித்து,
மீண்டும் கடினமான வழிகளில் கடவுளைத் தேடிக் கொண்டிருந்தனர்.
நம் கதை என்ன? நாம்
எவ்வகையான கடவுளை, எந்தெந்த இடங்களில் தேடுகிறோம்? எளிய வடிவில் நம் மத்தியில் வாழும்
இறைவனைச் சந்திக்க நாம் என்னென்ன முயற்சிகள் எடுத்து வருகிறோம்? கிறிஸ்மஸ் விழாவுக்கு
முன்னர் நாம் மேற்கொள்ளக்கூடிய ஒரு நல்ல ஆன்ம ஆய்வு இது. இந்த ஆய்வில் நாம் காணும் எளிய
பதில்கள் நம்மை வியப்படையச் செய்யும். சுற்றி வளைக்காமல் சொல்லப்படும் நேரடியான, எளிதான,
தெளிவான, பதில்கள் பல நேரங்களில் நம் நெற்றியில் வந்து அறையும் அடிபோல் இருக்கும். இத்தகைய
எளிய பதில்கள் நம்மைப் பொறிகலங்கச் செய்யும்.
Robert Fulghum என்பவர் எழுதிய ஒரு
நூலின் ஆரம்பம் நமது இன்றையச் சிந்தனையை நிறைவு செய்கிறது. "நான் தெரிந்துகொள்ள வேண்டிய
அனைத்தையும் Kindergartenல், அதாவது மழலைகள் பள்ளியில் பயின்றேன்" (All I Really Need
To Know I Learned In Kindergarten) என்ற நூலில் அவர் சொல்லியுள்ள கருத்துக்கள் இவை:
வாழ்வில்
நான் எப்படி இருக்கவேண்டும், என்ன செய்யவேண்டும்,
அவற்றை எப்படி செய்ய வேண்டும் என்ற அனைத்தையும் நான் மழலையர் பள்ளியில்
பயின்றேன். உண்மையான அறிவுத் தெளிவு, பல்கலைக்கழகம் என்ற
உயரமான மலை மீது கிடைப்பது அல்ல... பாலர் பள்ளி என்ற மணல் மேட்டில் கிடைப்பது. நான்
பாலர் பள்ளியில் கற்றுக்கொண்டவை இவைகளே: அனைத்தையும் பகிர்ந்துகோடு. ஏமாற்றாமல்
விளையாடு. யாரையும் அடிக்காதே. எடுத்தப் பொருட்களை
அதனதன் இடத்தில் மீண்டும் வைத்துவிடு. நீ அழுக்காக்கிய இடத்தை நீயே
சுத்தம் செய். உனக்கு உரிமையில்லாத பொருளை எடுக்காதே. யாரையாவது
காயப்படுத்தினால் மன்னிப்பு கேள். சாப்பிடுவதற்கு முன் கைகளைக் கழுவு.
படிப்பு, பாட்டு, விளையாட்டு,
ஓவியம் வரைதல் என்று பலவற்றையும் கலந்து வாழக் கற்றுக் கொள். வெளியில்
செல்லும்போது, அக்கம், பக்கம்
பார்த்து, கவனமாய்ப் போ. சாலையைக் கடக்கும்போது,
கைகளைக் கோர்த்து, சேர்ந்து நட...
இந்தப் பாலர் பள்ளிப் பாடங்களை மறக்காமல் நாம் இன்றுவரை வாழ்ந்திருந்தால், நம்
வாழ்வு ஆனந்தமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. நமது சமுதாயம், நமது அரசுகள்,
தொழில் நிறுவனங்கள்... எல்லாமே இந்த அடிப்படை அரிச்சுவடிப் பாடங்களைக் கடைபிடித்திருந்தால்,
இவ்வுலகம் இத்தனைப் பிரச்சனைகளைச் சந்தித்திருக்காது என்பது நிச்சயம்..... பகிர்ந்து
கொடுப்பது, ஏமாற்றாமல் விளையாடுவது, அழுக்காக்கியதைச் சுத்தமாக்குவது, தனக்கு உரிமையில்லாததை
எடுக்காமல் இருப்பது, செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பது, வாழ்வுப் பாதையில் கைகோர்த்து
நடப்பது... இவை அனைத்தும் பாலர் பள்ளிப் பாடங்கள்... ஆனால், இன்றைய சமுதாயத்தைப் பயமுறுத்தும்
பாடங்கள். இந்தப் பயத்தை விலக்கி, எளிய இப்பாடங்களை நாமும், மனித சமுதாயம் அனைத்துமே
கற்றுக்கொள்ள குழந்தை இயேசுவிடம் மன்றாடுவோம்.