அமெரிக்கப் பள்ளி துப்பாக்கிச்சூடு குறித்து திருத்தந்தந்தையின் இரஙகல் செய்தி
டிச.15,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டின் கனெக்டிக்கட் மாநிலத்தில் உள்ள நியூடவுனின் சேன்டிஹூக்
துவக்கப்பள்ளியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 20 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்தது
குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு இரங்கல் தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை
16ம் பெனடிக்ட். இந்த உயிரிழப்புகள் குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த கவலையையும் செப
உறுதியையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தெரிவிக்குமாறு பிரிட்ஜ்போர்ட் மறைமாவட்டத்திற்குத்
திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அனுப்பிய
தந்திச்செய்தி விண்ணப்பிக்கிறது. இதற்கிடையே, துப்பாக்கி வன்முறை குறித்து தேசிய அளவிலான
விவாதங்கள் இடம்பெறவேண்டும் என அமெரிக்க ஐக்கிய நாட்டின் கத்தோலிக்கக் குழு ஒன்று அரசுக்கு
விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது. மேலும், அப்பகுதியின் கத்தோலிக்க குருக்கள் ஒன்றிணைந்து,
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆன்மீக மற்றும் உளரீதியான உதவிகளை வழங்குவதில் தீவிரமாக
ஈடுபட்டுள்ளனர்.