ஊடகத்துறை அறிஞர் Gaston Robergeஅவர்களுக்கு மும்பை நகரில்
விருது
டிச.12,2012. ஊடகத்துறையை, சிறப்பாக, திரைப்படங்களைப் பற்றிய அறிவை வளர்க்கும் முயற்சிகளை
இந்தியாவில் ஒரு கல்வி முயற்சியாகத் துவக்கிய இயேசு சபை அருள்தந்தை Gaston Roberge அவர்களுக்கு
மும்பை நகரில் விருது ஒன்று வழங்கப்பட்டது. கனடா நாட்டைச் சேர்ந்த 77 வயதான அருள்தந்தை
Roberge, 1970ம் ஆண்டு கொல்கத்தாவில் ‘சித்ரபானி’ என்ற ஒரு மையத்தை உருவாக்கி, திரைப்பட
கல்வியைத் துவக்கி வைத்தார். உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் Satyajit Ray உட்பட
பல திரைப்பட அறிஞர்களின் உதவியுடன் அருள்தந்தை Roberge திரைப்படத் திறனாய்வு குறித்த
அறிவை வளர்த்துவந்தார். இந்தியாவில் திரைப்பட முயற்சிகளை முதன் முதலாக மேற்கொண்டவர்களில்
முக்கியமான, Bimal Roy என்ர்பவரின் நினைவாக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு விருது ஒன்றை
அருள்தந்தை Roberge அண்மையில் பெற்றார். திரைப்பட ஆய்வுகள் பற்றிய 15க்கும் மேற்பட்ட
நூல்களை எழுதியுள்ள அருள்தந்தை Roberge, தற்போது கொல்கத்தாவில் புனித சேவியர் கல்லூரியில்
பேராசிரியாகப் பணியாற்றி வருகிறார்.