டிச.08, 2012. திருவருகைக்காலச் சிந்தனை. வழங்குபவர் அருட்திரு இயேசு கருணா
“என் தலைவராகிய உங்கள் போதகர் உங்களுக்குத் துன்பமெனும் அப்பத்தையும்ää ஒடுக்குதலெனும்
நீரையும் கொடுத்திருந்தாலும், இனித் தம்மை மறைத்துக்கொள்ளமாட்டார். உங்கள் போதகரை நீங்கள்
கண்ணால் காண்பீர்கள்.” (எசாயா 30:20) மனித வாழ்வில் துன்பமும், கண்ணீரும் எதார்த்தம்.
அவைகளை இறைவன் எடுத்துவிட வேண்டும் என நினைப்பது சால்பன்று. துன்பத்தை அப்பமாகவும், ஒடுக்குதலைத்
தண்ணீராகவும் கொடுத்த இறைவன் நம்மை விட்டு அகன்றுவிடுவதில்லை. நம்மைத் தனியாய் தவிக்க
விடுவதில்லை. 15ஆம் நூற்றாண்டில் ஜெர்மனி நாட்டில் நுரம்பெர்க் என்ற கிராமத்தில் உள்ள
ஒரு குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் 18 பேர். இந்தக் குழந்தைகளைக் காப்பாற்ற இவர்களின்
தந்தை கிடைக்கும் எந்தத் தொழிலும் பரவாயில்லை என்று எல்லாத் தொழிலையும் நாளுக்கு 18 முதல்
20 மணிநேரம் செய்தார். இந்த 18 குழந்தைகளில் இரண்டு குழந்தைகளுக்கு பெரிய ஓவியராக மாறவேண்டும்
என்ற கனவு. ஆனால் இப்படிப்பட்ட குடும்பச் சூழலில் தந்தையால் படிப்பிற்கு பணம் கொடுக்க
முடியாது என்று எண்ணுகின்ற இந்தச் சிறுவர்கள் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்கின்றனர்.
என்னவென்றால் ஒருவர் படிக்கச் செல்லவேண்டும். அவர் படிக்கச் செல்கின்ற அந்த நான்கு ஆண்டுகள்
மற்றவர் கல்குவாரியில் வேலைசெய்து அதற்குப் பணம் கட்டவேண்டும். அவர் படிப்பு முடித்தவுடன்
மற்றவரின் படிப்பிற்கு பணவுதவி செய்ய வேண்டும். ஒரு ஞாயிறு காலை திருப்பலி முடிந்து வீடு
திரும்பியவுடன் ‘பூவா – தலையா!’ என்று போட்டுப்பார்க்க ஆல்பிரட் டியூரர் வெற்றி பெற்று
படிக்கச் செல்கின்றார். மற்றவர் கல்குவாரிக்குச் செல்கின்றார். இவர் அனுப்புகின்ற பணத்தில்
அவர் சிறப்பாகப் படிக்கத் தொடங்குகின்றார். அவரின் ஓவிய ஆற்றலையும், படைப்புத்திறனையும்
குறித்து பேராசிரியர்கள் வியந்து போகின்றனர். மிகப்புகழ்பெற்ற ஓவியராக தன் கிராமம் திரும்புகின்ற
ஆல்பிரட் தன் அனைத்துச் சகோதரர்களுக்கும் விருந்து வைக்கின்றார். விருந்தில் எல்லாரும்
மகிழ்ந்து கொண்டிருக்க, தான் இந்த அளவிற்கு உயர்வதற்கு உழைத்த தன் சகோதரனைத் தேடுகின்றார்.
ஒரு மூலையில் இருந்த மேசையில் தலைகுனிந்து அமர்ந்திருக்கின்றார் அவர். ஓடிச்சென்று ‘இனி
நீ படிக்கச் செல்லலாம்’ என்று சொல்லிக்கொண்டே அவரின் கைகளைப் பிடித்துக் குலுக்குகின்றார்.
அப்போதுதான் தெரிகிறது. அவரது சகோதரினின் கை கல்குவாரியில் வேலைசெய்ததால் சூம்பிப்போய்
உருக்குலைந்திருப்பது. ‘என்னால் இந்தக் கரண்டியைக் கூட பிடிக்க முடியவில்லை. ஓவிய தூரிகையை
எப்படிப் பிடிப்பேன்? பரவாயில்லை. நீ படித்ததே போதும். வாழ்த்துக்கள்’ என்று ஆரத்தழுவுகின்றார்.
ஆல்பிரட் கண்ணீர்விட்டு அழுகின்றார். ‘என் கனவை நனவாக்க நீ உன்னையே அழித்துக்கொண்டாயே’
என்று அண்ணனின் கைகளை ஓவியமாக வடிக்கின்றார். ‘கரங்கள்’ என்று அவர் படைத்த ஓவியம்தான்
இன்று ‘செபிக்கும் கரங்கள்’ என்று பல இடங்களில் அரங்கேறியுள்ளது. இந்தப் படத்தை இனி நீங்கள்
பார்க்கும்போதெல்லாம் நினைவிற்கொள்ளுங்கள்: ‘தனியாய் எவரும் சாதிப்பதில்லை.’ இறைவன் நமக்காய்
வடித்த செந்நீர் நம் வாழ்வில் அர்த்தம் கொடுக்க, நாம் ஒருவர் மற்றவருக்காய் கண்ணீர்
வடித்தல் அவசியம்தானே?