ஜெர்மனியில் உள்ள மரியன்னைத் திருத்தலத்தில் 21வது அகில உலக நோயுற்றோர் நாள்
டிச.07,2012. 2013ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி ஜெர்மனியில் Altötting எனுமிடத்தில் உள்ள
மரியன்னைத் திருத்தலத்தில் நோயுற்றோருக்கெனச் சிறப்பிக்கப்படும் 21வது அகில உலக நாள்
கொண்டாடப்படும். இந்த முக்கிய நிகழ்வில் திருத்தந்தையின் சார்பில் கலந்து கொள்ள நலப்பணியாளர்கள்
திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski செல்வார் என்று இவ்வெள்ளியன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2012ம்
ஆண்டு அக்டோபர் முதல் 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் முடிய நடைபெற்றுவரும் நம்பிக்கை ஆண்டின்
பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, பிப்ரவரி மாதம் Altötting மரியன்னை திருத்தலத்தில்
அகில உலக நோயுற்றோர் நாள் கொண்டாடப்படும். 1991ம் ஆண்டு முத்திபெற்ற திருத்தந்தை இரண்டாம்
ஜான்பால் அவர்கள் பார்கின்சன்ஸ் எனப்படும் நரம்புத் தளர்ச்சி நோயால் தாக்கப்பட்ட பின்னர்,
அவர் 1992ம் ஆண்டு அகில உலக நோயுற்றோர் நாளை நிறுவினார். ஒவ்வோர் ஆண்டும் லூர்து
அன்னை திருநாளான பிப்ரவரி 11ம் தேதி கொண்டாடப்படும் இவ்வுலக நாள் வழியே, நோயால் துன்புறுவோர்
உலகின் மீட்புக்காகத் தங்கள் வேதனைகளை அர்ப்பணிக்க வேண்டுமென்ற நோக்கத்தில், திருத்தந்தை
இரண்டாம் ஜான்பால் இந்த நாளை நிறுவினார்.