இந்தியாவில் இன்னும் வசூலிக்கப்படாமல் இருக்கும் மொத்த வரி ரூ.2.49 இலட்சம் கோடி
டிச.07,2012. இந்தியாவில் இன்னும் வசூலிக்கப்படாமல் இருக்கும் மொத்த வரி ரூ.2.49 இலட்சம்
கோடி என மத்திய நிதியமைச்சகம், பாராளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்துள்ளது. இத்தொகையில்
2.8 விழுக்காடு தொகையான ரூ.7000 கோடி மட்டுமே இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணமோசடி மற்றும் பத்திர மோசடி வழக்குகள் காரணமாக ரூ.1.30 லட்சம் கோடி நிலுவையில் உள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹசன் அலிகான் வழக்கில் ரூ.92,000 கோடி, பாதுகாப்பு முறைகேடு
வழக்குகளில் ரூ.20,000 கோடி, ஹர்சத் மேத்தா குழும நிறுவனங்களிடம் இருந்தும், தலால் குழுமத்திடம்
இருந்து ரூ.14,000 கோடியும், கேதன் பராக் குழுமத்திடம் இருந்து ரூ.4000 கோடியும் நிலுவையில்
உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் பாக்கி காரணமாக அனைத்து நடவடிக்கைகளையும்
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்நிறுவனங்களின் சொத்துக்களை
கையகப்படுத்தியும், விற்றும் பணம் பெற்றப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் அவைகள் நிலுவை
தொகையை ஈடுசெய்வதற்கு போதுமானதாக இல்லை எனவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தகைய
நெருக்கடியான சூழ்நிலை உருவாகும் வரை நிமையை புரிந்து கொள்ளமல் இருந்தது எப்படி எனவும்,
வரி பாக்கிகள் ஆயிரம் கோடி அளவை எட்டும் வரை நிலையை புரிந்து கொண்டு சீரமைக்க நடவடிக்கை
எடுக்காதது ஏன் எனவும் பாராளுமன்ற நிலைக்குழு கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், நிலுவை
தொகையை வசூல் செய்வதில் நிதியமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மந்த நிலையும், அவர்களின்
அலட்சியப் போக்கும் வேதனை தருவதாக உள்ளது எனவும் பாராளுமன்ற நிலைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உடனடி நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியது அவசியம் என கருத்து தெரிவித்துள்ளது.