பாகிஸ்தானில் கிறிஸ்தவ மறைபணியாளர் அடையாளம் தெரியாத இருவரால் சுடப்பட்டார்
டிச.05,2012. பாகிஸ்தானில் கடந்த 38 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த ஒரு கிறிஸ்தவ மறைபணியாளர்
இத்திங்களன்று லாகூரில் அடையாளம் தெரியாத இருவரால் சுடப்பட்டார். சுவீடன் நாட்டைச்
சேர்ந்த Bargeeta Almby என்ற 72 வயது பெண்மணி கடந்த 38 ஆண்டுகளாக பாகிஸ்தானில் பணி புரிந்து
வருபவர். இவர் டிசம்பர் 3, இத்திங்களன்று தன் வாகனத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத
இருவர் இவரைச் சுட்டதால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்
என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. மாற்றுத் திறன் கொண்ட, ஏழைக் குழந்தைகளுக்காக
ஓர் காப்பகம் நடத்தி வரும் Almby, பெண்கள் கல்வி மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்காக
உழைத்து வருபவர். பாகிஸ்தான் அரசில் பணிபுரியும் கத்தோலிக்க அமைச்சர் Paul Bhatti
இத்தாக்குதல் வன்மையான கண்டனத்திற்கு உரியது என்று கூறி, அடிப்படைவாதத்திலிருந்து பாகிஸ்தானை
மீட்க அனைத்து மக்களும் ஒன்றிணையவேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார்.