2012-12-03 16:11:18

இங்கிலாந்து, மற்றும் வேல்ஸ் குருத்துவக் கல்லூரியின் அங்கத்தினர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு


டிச.03,2012. திருநற்கருணை முன்பாக, தினமும் செபிக்கவும், இறைவார்த்தைக்குக் கவனமுடன் செவிமடுக்கவும் குருக்களும், குருமாணவர்களும் கற்றுக் கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உரோம் நகரில் உள்ள இங்கிலாந்து, மற்றும் வேல்ஸ் குருத்துவக் கல்லூரியின் அங்கத்தினர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கியத் திருத்தந்தை, இயேசுவின் நண்பர்களாக அழைக்கப்பட்டுள்ள நீங்கள், உலகிற்கு மீட்பைக் கொணரவேண்டிய உங்கள் பணியை உணர்ந்து, இறைவனிடம் முற்றிலுமாக உங்களைக் கையளியுங்கள் என்று விண்ணப்பித்தார்.
ஏற்கனவே நற்செய்தி அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் புதிய நற்செய்தி அறிவிப்புப் பணி மேற்கொள்ளப்படவேண்டியதன் தேவை குறித்தும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
மக்களிடம் காணப்படும் ஆன்மீகப் பசிக்கு உண்மையான உணவை வழங்கவேண்டிய குருக்களின் கடமையையும் சுட்டிக்காட்டி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் குருக்களுக்கும், குருமாணவர்களுக்கும் உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.