2012-12-01 14:52:03

இந்தியாவில் ஏழைகள் அதிகமாக வாழுகின்ற மாநிலம் உத்தரப்பிரதேசம்


டிச.01,2012. இந்தியாவில் ஏழைகள் அதிகமாக இருக்கின்ற மாநிலம் உத்தரப்பிரதேசம் எனவும், அதற்கடுத்தபடியாக பீகாரும், மகாராஷ்ராவும் உள்ளன என்று, 2009-10ம் ஆண்டுப் புள்ளிவிபரத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள ஏழைகளின் எண்ணிக்கையை மாநில வாரியாக திட்டக் குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உத்திரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் 7.37 கோடி ஏழை மக்கள் வாழ்வதாகவும், அதனைத் தொடர்ந்து பீகாரில் 5.43 கோடி ஏழைகளும், மகாராஷ்டிராவில் 2.7 கோடி ஏழைகளும் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெண்டுல்கர் கமிட்டிக் கொள்கையின்படி அளிக்கப்பட்ட இந்தப் பட்டியலைத் திட்டக்குழு இவ்வியாழனன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
நலவாழ்வு, கல்வி, உண்ணும் உணவு ஆகியவற்றிற்காகச் செலவிடப்படும் தொகையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புள்ளி விபரத்தின்படி மத்திய பிரதேசத்தில் 2.61 கோடிப் பேரும், மேற்கு வங்காளத்தில் 2.4 கோடிப் பேரும், ஆந்திராவில் 1.76 கோடிப் பேரும், இராஜஸ்தானில் 1.67 கோடிப் பேரும், ஒடிசாவில் 1.53 கோடிப் பேரும், கர்நாடகாவில் 1.42 கோடிப் பேரும், குஜராத்தில் 1.36 கோடி பேரும், ஜார்க்கண்டில் 1.26 கோடிப் பேரும், தமிழகம் மற்றும் சட்டீஸ்கரில் முறையே 1.21 கோடி பேரும், அசாமில் 1.16 கோடிப் பேரும் உள்ளனர். மிகவும் குறைந்த அளவாக அரியானாவில் 49.96 இலட்சம் ஏழை மக்கள் உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.