சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம்:வருமான வரித்துறை புது முடிவு
நவ.29,2012. சுவிட்சர்லாந்து வங்கியில், கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள, இந்தியர்களுக்கு
எதிராக, வழக்கு பதிந்து, சட்ட நடவடிக்கை எடுக்க, வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள சில வங்கிகளில், பெருமளவு கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ள
இந்திய வி.ஐ.பி.,க்களின் பெயர்கள் அடங்கிய ஒரு பட்டியலை இந்திய அரசியல் தலைவர்களில் ஒருவரான
அரவிந்த் கெஜ்ரிவால், அண்மையில் வெளியிட்டார். வங்கிக்கணக்கில் காட்டப்படாத பணத்தைப்
பதுக்கி வைத்துள்ள, 700 இந்தியர்களின் பட்டியலை, பிரான்சு அரசு, இந்திய அதிகாரிகளிடம்
ஏற்கனவே ஒப்படைத்திருந்தது. இதன் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள், விசாரணையைத்
துவக்கியிருந்தனர். சுவிட்சர்லாந்து வருவாய்த்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்து வங்கியில், இரகசியக் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்கள்,
வருமான வரித்துறையிடம் உள்ளன. இவர்களுக்கு எதிரான, சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு
செய்யப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அனுமதி, நிதி அமைச்சகத்திடமிருந்து
வரவேண்டும் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.