நவ. 28, 2012. உரோம் நகரில் குளிர்காலம் துவங்கிவிட்டபோதிலும், குளிர் என்பது இன்னும்
தன் வழமையான தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், இப்புதனன்று உரோம் நகரம் மழையால் நனைந்தது.
இருப்பினும் திருத்தந்தையின் மறைபோதகத்தை செவிமடுக்க வந்த கூட்டத்திற்கு குறைவில்லை.
திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கம் வழமைபோல் நிரம்பி வழிய, விசுவாச ஆண்டு குறித்த தன் போதனைகளை
இவ்வாரமும் தொடர்ந்தார் பாப்பிறை. மனித இதயத்தின் ஆழமான ஏக்கங்களின் பதிலுரையாக நம்
உடன் வாழ் மக்களுக்கு கிறிஸ்தவ விசுவாசத்தை எடுத்துரைப்பதும், இறைவனைக் குறித்து அவர்களுடன்
உரையாடுவதும் எவ்வாறு என்பது குறித்து, விசுவாச ஆண்டின் இந்த மறைக்கல்வி தொடரின் ஒருபகுதியாக
இன்று நோக்குவோம் என, தன் இவ்வார புதன் மறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இயேசு கிறிஸ்துவின் கடவுளை நம் காலத்தின் மக்களுக்கு கொண்டுவருவதை இது குறித்து நிற்கிறது.
இயேசுவின் நற்செய்தியின் உள்மையப்பகுதிக்கு அமைதியாகவும் தாழ்ச்சியுடனும் சான்றுபகர்வதையும்
இது குறித்து நிற்கிறது. இது அன்பே வடிவான இறைவனின் நற்செய்தி. அவரே சிலுவை வரையிலும்கூட
அழைத்துச்சென்ற இயேசுவில் நமக்கு நெருக்கமாக வந்தார் மற்றும் உயிர்ப்பின் வழி நமக்கு
முடிவற்ற வாழ்வு குறித்த வாக்குறுதியையும் நம்பிக்கையையும் தந்தார். மக்களின் கேள்விகள்,
போராட்டங்கள், தேவைகள் குறித்த அன்புநிறை அக்கறையின் வழி மக்களை, தந்தையாம் இறைவனை நோக்கி
அழைத்துச்சென்றதன் வழி நமக்குரிய எடுத்துக்காட்டாக உள்ளார் இயேசு. நம் உடன்வாழ் மக்களுக்கு
இறைவனைக் கொணர்வதில் குடும்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனெனில் மகிழ்விலும் உரையாடலிலும்
மன்னிப்பிலும் அன்பிலும் விசுவாச வாழ்வு தினமும் வாழப்படுவது குடும்பங்களிலேயே. நம்மை
அன்பால் மீட்டு நம் உயர்நிலையை வெளிப்படுத்திய இயேசுகிறிஸ்துவின் கடவுள், மனித நகர் இறைநகராக
மாறும் வண்ணம் புதுப்பிக்கப்படுமாறு திருஅவைக்குள் நமக்கு அழைப்பு விடுக்கிறார். இவ்வாறு
இவ்வார புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, வரும் சனிக்கிழமையன்று உலகம் முழுவதும்
சிறப்பிக்கப்படவுள்ள எயிட்ஸ் விழிப்புணர்வு தினம் குறித்த தன் கருத்துக்களையும் வழங்கினார்.
பல இலட்சம் உயிர்களைப் பலிவாங்கி, பலரின் துன்பங்களுக்கு காரணமாகிய இந்நோய், பெரும்பாலும்
ஏழைநாடுகளின் மக்களையே பாதித்துள்ளதை அறிவேன் என்ற திருத்தந்தை, தாயின் வழி ஒவ்வோர் ஆண்டும்
இந்நோயைப் பெறும் எண்ணற்ற குழந்தைகள் குறித்தும் தன் கவலையை வெளியிட்டார். இந்நோயைக்
கட்டுப்படுத்த திருஅவையில் எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய ஊக்கமளிப்பதாகவும்
இப்புதன் மறைபோதகத்தின் இறுதியில் எடுத்துரைத்த திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க
ஆசீரையும் அளித்தார்.