நன்றியறிதல் நாள் அன்றும் வர்த்தகம் நடைபெறுவது, பேராசையை வளர்க்கும் நமது கலாச்சாரத்தின்
ஒரு வெளிப்பாடு - அமெரிக்கக் கர்தினால் Timothy Dolan
நவ.23,2012. நன்றியறிதல் நாள் அன்றும் நமது கடைகள் திறக்கப்பட்டு வர்த்தகம் நடைபெறுவதை
நாம் முன்னேற்றம் என்று கூற முடியாது, மாறாக, இது பேராசையை வளர்க்கும் நமது கலாச்சாரத்தின்
ஒரு வெளிப்பாடு என்று அமெரிக்கக் கர்தினால்களில் ஒருவரான Timothy Dolan கூறினார். நவம்பர்
22, இவ்வியாழனன்று அமெரிக்க ஐக்கிய நாட்டில் நன்றியறிதல் நாள் கொண்டாடப்பட்டது. இந்நாளில்
குடும்பங்கள் ஒன்றிணைந்து வருவதற்கு ஏற்ற வகையில், இந்நாள் ஒரு விடுமுறையாக கடைபிடிக்கப்படுவது
வழக்கம். அண்மைய ஆண்டுகளில், இந்நாளிலும் பெரும் அங்காடிகள் திறக்கப்பட்டு, வர்த்தகங்கள்
பெருமளவில் நடைபெறும் போக்கைக் குறித்து, அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால்
Dolan தன் வருத்தத்தைத் தெரிவித்தார். கடந்த ஆண்டு Sears, Wal-Mart, Target, Kmart,
Toys“R”Us, Gap போன்ற பெரும் அங்காடி நிறுவனங்கள் நன்றியறிதல் நாளன்றும் அதற்கடுத்த நாளன்றும்
கடைகளைத் திறந்தததால், வழக்கமான நாள்களைக் காட்டிலும், 22 விழுக்காடு அதிகமான வர்த்தகம்
இந்நாள்களில் நடந்தன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. செய்யும் தொழில்களில் இருந்து
விலகி, குடும்ப உறவுகளை வளர்ப்பதற்கேன்று நமது முன்னோர் உருவாக்கிய இந்த நல்ல நாளின்
அடிப்படை உணர்வுகளை நாம் தொடர்ந்து கடைபிடிக்க இறைவன் நமக்கு உதவவேண்டும் என்று கர்தினால்
Dolan New York Post என்ற செய்தித்தாளுக்கு வரைந்த ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.