2012-11-23 15:20:26

இனக்கலவரங்களால் அதிக ஆபத்திற்கு உள்ளாவது குழந்தைகளே - ஆப்ரிக்க ஆயர்கள்


நவ.23,2012. இனக்கலவரங்களால் அதிக ஆபத்திற்கு உள்ளாவது குழந்தைகளே என்றும், அவர்களைப் பாலியல் வன்முறைக்கும், போர் பயிற்சிக்கும் பலவந்தப்படுத்துவது அவர்களது தனிப்பட்ட மாண்புக்கு எதிரானது என்றும் ஆப்ரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
நவம்பர் 20, இச்செவ்வாய் முதல் இவ்வியாழன் முடிய ஆப்ரிக்கக் கண்டத்தில் காரித்தாஸ் அமைப்பு ஆற்றிவரும் பணிகள் குறித்துப் பேச காங்கோ குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் கூடியிருந்த ஆப்ரிக்க ஆயர்கள், ஆப்ரிக்காவின் பல்வேறு நாடுகளில், சிறப்பாக, காங்கோ குடியரசில் அப்பாவி மக்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக நிகழும் வன்முறைகளைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தற்போது நிலவும் குளிர்காலம், பட்டினி, மற்றும் பிற வன்முறைகளால் துன்புறும் மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டுமென்று ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுக்களின் கட்டுக்கடங்காத வன்முறைகளால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான அப்பாவி மக்கள் தங்கள் இல்லங்களை விட்டு தப்பித்து, துயர்துடைப்பு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர் என்று காரித்தாஸ் இயக்குனர் அருள்தந்தை Oswald Musoni கூறினார்.








All the contents on this site are copyrighted ©.