2012-11-22 15:46:48

முகரம் திருநாளையொட்டி பைசலாபாத் நகரில் சமரசக் கருத்தரங்கு


நவ.22,2012. வருகிற சனிக்கிழமை, மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கொண்டாடப்படவிருக்கும் முகரம் திருநாளையொட்டி, கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஒருங்கிணைந்து பாகிஸ்தான் பைசலாபாத் நகரில் ஒரு சமரசக் கருத்தரங்கை நடத்தினர்.
"வேறுபட்ட, பன்முகச் சமுதாயத்தில் ஒன்றுபட்டு வாழக் கற்றுக்கொள்ளுதல்" என்ற மையக் கருத்துடன் அண்மையில் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட இளையோர், தற்போது கடைபிடிக்கப்படும் முகரம் மாதத்தில் சகிப்புத்தன்மை, உரையாடல், ஒருவரை ஒருவர் மதித்தல் ஆகிய அம்சங்கள் தங்கள் தலைமுறையில் வளரவேண்டுமென்ற அழைப்பை விடுத்தனர்.
திருத்தூதர் முகம்மது வழங்கிய இறுதி அறிவுரையும், பாகிஸ்தான் நாட்டின் தந்தை முகம்மது அலி ஜின்னா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வழங்கிய உரையும் சமயங்களுக்கிடையே நல்லுறவை வளர்க்கும் கூற்றுகள் என்று இஸ்லாமிய சமுதாய பணியாளர் Tahir Iqbal கூறினார்.
முகரம் மாதத்தில் வன்முறைகள் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன என்றாலும், ஆங்காங்கே வன்முறைகள் நிகழ்ந்துள்ளது வேதனை தருகிறது என்று கிறிஸ்தவ சமுதாயப் பணியாளர் Yousaf Adnan கூறினார்.
இதற்கிடையே, இப்புதன் மாலை முகரம் மாதத்தையொட்டி தொழுகைக்குச் சென்ற மக்கள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 23 பேர் இறந்துள்ளனர், மற்றும் 60க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.








All the contents on this site are copyrighted ©.