குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அனைத்து நாடுகளும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்
நவ.20,2012. குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அனைத்து நாடுகளும் முன்னுரிமை கொடுக்க
வேண்டும் என்று கேட்டுள்ளது ஐ.நா. நிறுவனம். நவம்பர் 20, இச்செவ்வாயன்று அனைத்துலக
குழந்தைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி இவ்வாறு கேட்டுள்ள ஐ.நா. நிறுவனம், ஒவ்வொரு
நாளும் இலட்சக்கணக்கான குழந்தைகளின் உரிமைகள் மீறப்படுகின்றன என்றும் கூறியுள்ளது. இன்று
உலகில் 6 கோடியே 70 இலட்சம் சிறார் பள்ளிக்குச் செல்லவில்லை, ஏறக்குறைய 20 கோடிச் சிறார்
வாழ்வதற்காக வேலை செய்கின்றனர், 10 கோடிக்கு மேற்பட்ட சிறார் கொத்தடிமைகளாக முதலாளிகளால்
பயன்படுத்தப்படுகின்றனர், 15க்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட ஏறக்குறைய 70 ஆயிரம் விடலைப்
பருவத்தினர் கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர், தடுத்து நிறுத்தக்கூடிய
நோய்களால் தினமும் 19 ஆயிரம் சிறார் இறக்கின்றனர் என ஐ.நா. புள்ளி விபரங்கள் கூறுகின்றன.