2012-11-16 15:36:51

உலக அளவில் நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு குடும்பம் உருவாகும் - பேராயர் Fisichella நம்பிக்கை


நவ.16,2012. நம்பிக்கை ஆண்டையொட்டி உரோம் நகருக்கு வரும் திருப்பயணிகள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் உலக அளவில் நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு குடும்பம் உருவாகும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Rino Fisichella.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்திருக்கும் நம்பிக்கை ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் உள்ள வத்திக்கான் திருப்பயண அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு சுருள் மடலில் திருப்பயணிகள் தங்கள் எண்ணங்களை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இச்சுருள் மடலில் பதிவாகும் நம்பிக்கை எண்ணங்களை இணையதளத்தில் வெளியிட்டு, அதன் மூலம் நம்பிக்கை எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு குடும்பத்தை உருவாக்குவதே தங்கள் நோக்கம் என்று திருப்பயணிகள் அலுவலகத்தின் இயக்குனர் அருள்தந்தை Cesare Atuire கூறினார்.
தங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யும் திருப்பயணிகள், அத்தடன் தங்கள் தேவைகளைக் கூறி வேண்டுதல்களுக்கும் விண்ணப்பிக்கலாம் என்று அருள்தந்தை Atuire கூறினார்.








All the contents on this site are copyrighted ©.