2013ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அகில உலக இளையோர் நாளுக்கென திருத்தந்தை வழங்கியுள்ள
செய்தி
நவ.16,2012. பிரேசில் நாட்டின் ரியோடிஜெனீரோ நகரில் விரிந்த கரங்களுடன் நிற்கும் உலக
மீட்பர் கிறிஸ்துவின் உருவம் நம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது என்று திருத்தந்தை 16ம்
பெனடிக்ட் கூறினார். 2013ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் அகில உலக இளையோர் நாளுக்கென
திருத்தந்தை வழங்கியுள்ள செய்தியில், புதிய நற்செய்திப் பணிக்கென இளையோர் தங்களை இன்னும்
ஆர்வமாய் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமென்ற சிறப்பான அழைப்பை விடுத்துள்ளார். கிறிஸ்துவின்
சீடர்களாதல், அனைத்து நாடுகளையும் ஒன்று சேர்த்தல், நம்பிக்கையில் ஊன்றியிருத்தல், ஆகிய
எண்ணங்கள் உட்பட, இச்செய்தியை எட்டு பகுதிகளாக திருத்தந்தை விடுத்துள்ளார். இரண்டாம்
வத்திக்கான் பொதுச்சங்கம் ஆரம்பமானதன் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் அகில உலகத்
திருஅவை நம்பிக்கை ஆண்டையும், புதிய நற்செய்திப் பணி என்ற கருத்தையும் சிறப்பித்து வரும்
இவ்வேளையில், பிரேசில் நாட்டில் நடைபெறவிருக்கும் இளையோர் நாள் சிறப்பு வாய்ந்த ஒரு தருணம்
என்று திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும்
சீடராக்குங்கள்" என்ற மையக் கருத்துடன் நடைபெறவிருக்கும் இந்த உலக நிகழ்ச்சியில் அனைத்துலக
இளையோரும் ஆர்வமாகக் கலந்துகொள்ள வாருங்கள் என்று திருத்தந்தை சிறப்பானதோர் அழைப்பைத்
தன் செய்தியின் மூலம் விடுத்துள்ளார்.