அருளாளர் இரண்டாம் ஜான்பால் இத்தாலிய பாராளுமன்றத்திற்குச் சென்றதன் பத்தாம் ஆண்டு
நினைவு
நவ.15,2012. தன் உடல் நலக் குறைவையும் பொருட்படுத்தாது, அருளாளர் திருத்தந்தை இரண்டாம்
ஜான்பால் 2002ம் ஆண்டு இத்தாலிய பாராளுமன்றத்திற்குச் சென்றது இத்தாலிக்கும், திருப்பீடத்திற்கும்
இடையே உள்ள வலுவான ஓர் உறவின் அடையாளம் என்று திருத்தந்தை கூறினார். 2002ம் ஆண்டு
நவம்பர் 14ம் தேதி அருளாளர் இரண்டாம் ஜான்பால் இத்தாலிய பாராளுமன்றத்திற்குச் சென்றதன்
பத்தாம் ஆண்டு நினைவையொட்டி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
அவர்களின் சார்பில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே செய்தியொன்றை இப்புதனன்று
அனுப்பினார். உலகம் சந்தித்துவரும் சமுதாயப் பிரச்சனைகளுக்கு, கிறிஸ்தவ நெறிமுறைகளிலிருந்து
தீர்வுகளைக் காணவேண்டும் என்று திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் விடுத்த அழைப்பை தன் செய்தியில்
குறிப்பிட்டத் திருத்தந்தை, கடந்த பத்தாண்டுகளில் நாம் சந்தித்துள்ள பல கடினமான சூழல்களில்
கிறிஸ்தவ விழுமியங்கள் காட்டிவரும் வழிகளை இத்தாலிய அரசு மறந்துவிடக்கூடாது என்று கூறினார். இத்தாலிய
அரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் சுமுகமான, வலுவான உறவு, இத்தாலிய நாட்டை
வளமான பாதையில் இட்டுச்செல்லும் என்ற தன் நம்பிக்கையை, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன்
செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.