2012-11-14 15:53:30

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை விசாரிப்பதற்கு ஆஸ்திரேலிய அரசின் முயற்சி - ஆயர்கள் வரவேற்பு


நவ.14,2012. குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறைகளை விசாரிப்பதற்கென ஆஸ்திரேலிய அரசு ஒரு குழுவை உருவாக்கும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அறிவித்துள்ளதை அந்நாட்டு ஆயர்கள் வரவேற்றுள்ளனர்.
குழந்தைகளுக்கு எதிராக நிகந்துள்ள பாலியல் வன்முறைகள் திருஅவை உறுப்பினர்கள் மத்தியில் மட்டும் காணப்படுகிறது என்று கூறுவதை வன்மையாக எதிர்ப்பதாகக் கூறிய ஆஸ்திரேலிய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால ஜார்ஜ் பெல் (George Pell), குடும்பங்கள், பள்ளிகள், இன்னும் மற்ற நிறுவனங்களில் இத்தகையக் குற்றங்கள் நடைபெறுகின்றன என்பதை வலியுறுத்திக் கூறினார்.
கடந்த இருபது ஆண்டுகளாக திருஅவை இந்தக் குற்றச்சாட்டுக்குத் தகுந்த பதில் அளித்துள்ளது என்பதையும் எடுத்துரைத்த கர்தினால் பெல், இக்குறையை நீக்க காவல்துறையுடனும், நீதித் துறையுடனும் ஒத்துழைக்க வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளிடம் மன்னிப்பு வேண்டுவதாகவும் உரைத்த கர்தினால் பெல், இக்குற்றங்களை மறைக்க தலத் திருஅவை முயன்றுவருவதாகக் கூறுவது உண்மையல்ல என்பதையும் செய்தியாளர்களிடம் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.