இந்தோனேசியாவில் வாழும் சிறுபான்மையினர், தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாவது கண்டனத்திற்கு
உரியது - ஐ.நா. உயர் அதிகாரி
நவ.14,2012. இந்தோனேசியாவில் வாழும் சிறுபான்மையினர், தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாவதும்,
காவல் துறையினர் இப்பிரச்சனைகளைத் தீர்க்க எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளாமல் இருப்பதும்
கண்டனத்திற்கு உரியதென்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இத்திங்கள், செவ்வாய்
ஆகிய இருநாட்கள் இந்தோனேசியாவில் பயணம் மேற்கொண்ட ஐ.நா.மனித உரிமைகள் அவையின் தலைவர்
நவநீதம் பிள்ளை, ஜகார்த்தாவில் செய்தியாளர்களிடையே பேசுகையில் இவ்வாறு கூறினார். மேற்கு
ஜாவாவில் உள்ள Bogor எனுமிடத்தில் கிறிஸ்தவர்கள் வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்கு உச்சநீதி
மன்றம் அனுமதி வழங்கிய பின்னரும், அப்பகுதியில் உள்ள இஸ்லாம் அடிப்படைவாதக் குழுவினர்
வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்குத் தடை செய்து வருவதை ஐ.நா. அதிகாரி வன்மையாகக் கண்டித்தார். இந்தோனேசிய
அரசு காப்பாற்ற வேண்டிய சட்டங்களை தனிப்பட்ட குழுக்கள் தங்கள் கைகளில் எடுத்திருப்பது
நாட்டின் சட்டம் ஒழுங்குச் சூழலுக்குப் பெரும் ஆபத்து என்றும் ஐ.நா. அதிகாரி நவநீதம்
பிள்ளை எடுத்துரைத்தார்.