நவ.03, 2012. கடந்த 20 ஆண்டுகளில் மட்டும், 5000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டுத்
தொகை, பொதுமக்களிடம் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும், பணத்தை முதலீடு செய்யும் முன்,
மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறும், தமிழகக் காவல்துறை எச்சரித்துள்ளது. கடந்த
1990களில் இருந்து பல கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிவரும்
பல்வேறு நிறுவனங்கள் குறித்த உண்மைகள் வெளிவந்துள்ள போதிலும், அண்மைக்காலங்களிலும் "ஈமு
கோழி பண்ணை" விவகாரங்களில் அப்பாவி விவசாயிகள் பெருமளவில் ஏமாந்தது குறித்து கவலையை வெளியிடும்
காவல்துறையினர், மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டியது முதல் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளனர். நிதிமோசடி
குற்றங்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகி, ஊடகங்களில் வெளியாகி வரும் நிலையிலும், விழிப்புணர்வு
இன்னமும் பொதுமக்களைப் போதிய அளவில் சென்றடையவில்லை என கவலை வெளியிடும் பொருளாதார குற்றத்தடுப்பு
காவல்துறையினர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும்,
ஏறத்தாழ 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி நடந்திருக்கலாம் என, தகவல்கள் கிடைத்துள்ளதாகவும்
தெரிவித்துள்ளனர்.