Homsநகரின் மையத்தில் வாழ்ந்துவந்த கடைசி கிறிஸ்தவர் ஒருவர் கொல்லப்பட்டார்
நவ.02,2012. சிரியாவின் Homs நகரின் மையத்தில் வாழ்ந்துவந்த கடைசி கிறிஸ்தவர் ஒருவர்
கொல்லப்பட்டார் என்றும், அப்பகுதியில் உள்ள இயேசு சபை நிறுவனம் ஒன்று தாக்கப்பட்டது என்றும்
செய்திகள் வெளியாகியுள்ளன. சிரியாவின் இராணுவத்திற்கும் புரட்சிக் குழுக்களுக்கும்
இடையே கடந்த பல மாதங்களாக நடைபெற்றுவரும் மோதல்களால் Homs நகரில் வாழ்ந்து வந்த அனைத்து
கிறிஸ்தவர்களும் வேற்றிடங்களுக்குச் சென்றுவிட்டனர். 84 வயதான கிரேக்க ஆர்த்தடாக்ஸ்
கிறிஸ்தவரான Elias Mansour, மாற்றுத் திறனாளியான தன் மகனுக்காக அப்பகுதியிலேயேத் தங்கிவிட்டார்
என்று கூறப்படுகிறது. போராட்டக் குழுவினரோ இராணுவமோ தன்னைத் தாக்க வந்தால், அவர்களிடம்,
இறைவன் கொடுத்த பத்து கட்டளைகளையும், விவிலிய கூற்றுக்களையும் தான் சொல்லவிருப்பதாக Elias
Mansour கூறியிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. Elias Mansour இப்புதனன்று கொல்லப்பட்டார்
என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. இவரது அடக்கச் சடங்கு இவ்வியாழனன்று நடைபெற்றது. Hamiyeh
எனும் இடத்தில் இருந்த இயேசு சபையினரின் இல்லம் ஒன்று இவ்வியாழனன்று தாக்குதல்களுக்கு
உள்ளானது என்றும், இத்தாக்குதலில் கட்டிடம் சிறிது பாழடைந்தாலும், உயிர்ச் சேதம் எதுவுமில்லை
என்றும் Fides செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.