அக்.31,2012. இந்தியாவின் ஜான்சி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருள்தந்தை Peter Parapullil
அவர்களைத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இப்புதனன்று நியமனம் செய்தார். இம்மறைமாவட்டத்தின்
ஆயராக 1977ம் ஆண்டு முதல் பணியாற்றிய ஆயர் Frederick D'Souza அவர்களின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட
திருத்தந்தை, இதுவரை அம்மறைமாவட்டத்தின் குருகுல முதல்வராக 2005ம் ஆண்டு முதல் பணியாற்றி
வரும் அருள்தந்தை Peter Parapullil அவர்களை ஆயராக நியமனம் செய்துள்ளார். 1949ம் ஆண்டு
கேரளாவின் Perumanoorல் பிறந்த Peter, 1976ம் ஆண்டு ஜான்சி மறைமாவட்டத்தின் குருவாகத்
திருநிலைப்படுத்தப்பட்டார். உரோமையில் உள்ள கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில்
தன் உயர்கல்வியை முடித்த அருள்தந்தை Peter, ஜான்சி மறைமாவட்டத்தின் பல முக்கிய பொறுப்புக்களில்
பணியாற்றியவர்.1954ம் ஆண்டு மறைமாவட்டமாக உருவாக்கப்பட்ட ஜான்சியில், ஏறத்தாழ நாலாயிரம்
கத்தோலிக்கர்கள் வாழ்கின்றனர். 22 பங்குத்தளங்களைக் கொண்ட இம்மறைமாவட்டத்தில், 54 குருக்களும்,
236 இருபால் துறவியரும் பணி புரிகின்றனர்.