சிறைகளில் வாழும் மனிதர்களையும் சேர்த்து ஒவ்வொரு மனிதரும் மதிப்பிற்குரியவர்கள் -
கர்தினால் Murphy-O’Connor
அக்.31,2012. படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும் இறைசாயலில் படைக்கப்பட்டுள்ளதால், அவர்கள்
அனைவருமே மதிப்பிற்குரியவர்கள், இங்கிலாந்திலும், Walesஇலும் உள்ள சிறைகளில் வாழும் 87,000
பேரையும் சேர்த்து ஒவ்வொரு மனிதரும் மதிப்பிற்குரியவர்கள் என்று கர்தினால் Cormac Murphy-O’Connor
கூறினார். 'நம்பிக்கையும் குற்றங்களுக்கு நீதி வழங்கும் முறையும்' என்ற தலைப்பில்
இச்செவ்வாயன்று இலண்டன் மாநகரில் உள்ள Allen Hall குருத்துவப் பயிற்சி இல்லத்தில் உரையாற்றிய
கர்தினால் O’Connor இவ்வாறு கூறினார். இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் ஏடுகள்,
பல்வேறு திருத்தந்தையர்களின் மடல்கள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டி, தன் உரையை
வழங்கினார் கர்தினால் O’Connor. சிறையில் கைதிகளாய் இருப்பவர்கள் நம்பிக்கையின் உதவியுடன்
தங்கள் வாழ்வை மீண்டும் சீரமைக்க விழைகின்றனர் என்று அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால்
ஜுபிலி ஆண்டான 2000ம் ஆண்டில் எழுதிய 'சிறைகளில் ஜுபிலி' என்ற மடலைக் குறித்தும், திருத்தந்தை
16ம் பெனடிக்ட் Rebibbia சிறையில் உள்ளவர்களைச் சந்தித்தபோது வழங்கிய உரையைக் குறித்தும்
கர்தினால் O’Connor தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.