2012-10-29 14:55:16

கவிதைக் கனவுகள் – இதயத்தில் ஈரம் இருந்தால்....


இரண்டு கைகளும்
இரண்டு கால்களும்
இல்லா இளைஞருக்கு
இருப்பிடம், சக்கரப் பலகை.
வயிற்றால் தள்ளிக் கொண்டு
வாகனத்தைக் கடந்து செல்லும் காட்சி
விழிகளில் கசிய வைத்தது குருதியை!.

வழியில் கிடைத்த
வாழைப்பழத்தை
வாயினால் சாப்பிட்ட காட்சி
துண்டிக்க வைத்தது இதய நரம்புகளை!.

சகோதரா! நீ என்ன
நகர்ந்து செல்லும் விலங்கினமா?
தாகத்துக்குத் தண்ணீரைத் தானாகத்தான்
குடிப்பாயோ?
பல் விளக்க கைகள் இல்லை
பாத்ரூம் செல்ல கால்கள் இல்லை
ஆனால்
பசி மட்டும் உனக்கிருக்கு!
இது யார் செய்த கோலம்!
படைத்தவனா? இல்லை
பட்டாசு ஆலையா? இல்லை
படைக்கலமா?

வாழத் துடிக்கும் இளைஞரின்
கைகளையும் கால்களையும்
பறித்த மானிடமே, உனது
மனிதத்தை மலரவிடு.!
அவரது சுவாசத்தைச் சுருக்கிய
தென்றலே, உனது
மடியில் சுமந்து செல்.
கருணைக் கடவுளே, உமது
கரங்களில் தாங்கிச் செல்.







All the contents on this site are copyrighted ©.